மதுரை மாநகராட்சி ஆபிசர் ஆறுமுகத்துக்கு ஆசிரியரால் கண்டம்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கமா போச்சு
மதுரை: மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 74 வயதாகும் பரசுராமன் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆவார். இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது மூத்த மகன் ஈஸ்வர கண்ணனுக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறார். தொடர்ந்து தன் மகனுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான சொத்தை பெயர் மாற்றம் செய்வதற்கு மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கடந்த 13-ந் தேதி விண்ணப்பித்துள்ளார்.

ஓய்வு பெறற ஆசிரியர் பரசுராமனின் மனு, மதுரை மாநகராட்சி மண்டல பிரிவு அலுவலகமான கண்ணனேந்தல் பகுதியில் உள்ள மாநகராட்சி வரிவசூல் செய்யும் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அந்த மனுமவினை மாநகராட்சி 6-வது வார்டு பில் கலெக்டர் ஆறுமுகம் (50) விசாரணை நடத்தி உள்ளார். இவர் சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை 15-ந் தேதி அவரும், அவரது உதவியாளரும் உறவினருமான சுதாகர் (25) ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து ஆய்வு செய்த இடத்தை முழுவதும் அளந்து பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனே கையெழுத்து போட்டு தருவதாக பில் கலெக்டர் ஆறுமுகம் தெரிவித்தாராம். ஆனால் பரசுராமன், நான் ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கெஞ்சியுள்ளார். அதைதொடர்ந்து ரூ.15 ஆயிரம் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். இறுதியாக ரூ.10ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தாராம் ஆறுமுகம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமனிடம் ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி உள்ளார்கள். நேற்று காலை போலீசாரின் அறிவுரைப்படி, பரசுராமன் அந்த பணத்துடன் கண்ணனேந்தல் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மதுரை லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் போலீசார் மறைந்து நின்றிருந்தார்கள். பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரூ.10 ஆயிரத்தை பரசுராமன் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை அவர் வாங்கி உதவியாளர் சுதாகரிடம் கொடுத்துதிருக்கிறார்.. உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த நடவடிக்கை மதுரை மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications