புது பிரச்சினை.. இரவு, பகலாக பறந்து வரும் கரும் துகள்கள்! தத்தளிக்கும் மதுரை தத்தனேரி.. என்ன காரணம்?
மதுரை: மதுரை தத்தனேரி மின்மயானத்தில் இருந்து வெளியாகும் கரும்புகையுடன் கரும் துகள்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகள் மற்றும் பொதுமக்கள் மீது படிவதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
மதுரை மாநகராட்சியில் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கி வருகின்றன. தற்போது தத்தனேரி மயானத்தில் அதிகமான சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மின் மயானம் இரவும் பகலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஏரியா மக்களுக்கு பயம்
மதுரை தத்தனேரி மின்மயானத்தில் தொடர்ந்து எரியூட்டப்படும் கொரோனா பிரேதங்களால் வெளியேறும் கரும்புகை துகள்கள் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தண்ணீர் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விழுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நள்ளிரவிலும் எரியூட்டும் வேலை
இதுகுறித்து மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தாகூர் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் கூறும்போது, தினமும் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் 60க்கும் மேற்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து எரியூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தண்ணீர் பாத்திரங்கள்
கடந்த சில தினங்களாக தத்தனேரி மின்மயானத்தில் இருந்து வெளியாகும் கரும்புகை சுற்றுவட்டார பகுதியான செல்லூர் தாகூர் நகர், கீழ கைலாசபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும், தண்ணீர் பாத்திரங்களிலும், பொதுமக்கள் மீதும் இந்த கரும்துகள்கள் விழுகின்றன.

ஏன் கருந்துகள் பரவுகிறது?
குறிப்பாக இந்த கரும் துகளானது கொரோனாவால் இறந்தவர்களின் மீது சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் PPE கிட்டுகளுடன் எரிக்கப்படுவதால் தான் இதுபோன்ற கருந்துகள்கள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு தோலில் அலர்ஜி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ந்து இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications