இலவச கல்வி தேவை.. முதலாளிகளுக்கு கார்..பேருந்துகளுக்கு காத்திருக்கும் மாணவர்கள் - நீதிபதி சுளீர்
மதுரை: கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும் கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ காரிலும் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உசிலம்பட்டி மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் வழக்கு தொடுத்திருந்தார்.

அதில், "நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கல்லூரி முதல்வர் மற்றும் கள்ளர் கல்விக் கழக செயலாளர் வசூலித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்லூரி இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ரூ. 12 லட்சத்து 83 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளித்துள்ளார். அதுதொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் 22-23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி முதல்வர் முதலில் விண்ணப்பம் செய்யும்படியும், பிறகு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்பது போல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்குள் டிஎன்டி அமைப்பினர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட்டளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவே தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வு,
வளர்ந் நாடுகளைப் போன்று அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர். கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து தமிழக உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர். அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து கூறியுள்ளார்.
சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும் கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ காரிலும் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது. கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications