தமிழகம் வந்த வெளிநாட்டு விமான பயணிகளிடம் கொரோனா கண்டறியப்படவில்லை! இருந்தாலும்..அமைச்சர் எச்சரிக்கை
மதுரை : வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வந்த ஆயிரக்கணக்கான நபர்களிடம் சோதனை செய்த போதும் யாருக்கும் கொரோனா தொற்று என்று கண்டறியப் படவில்லை எனவும் இருந்தும் சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டுமென தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் மூன்றாவது அலைக்குப் பிறகு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை வெறும் 50 என்ற எண்ணிக்கைக்கு குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோன தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 50க்குள் இருந்த பாதிப்பு தற்போது 200 என்ற அளவை எட்டி வரும் நிலையில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது. என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விமான நிலையத்தில் ஆய்வு
மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவி மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யும் இடத்தினை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறையினரிடம் கொரோனா மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவு பரவி வரும் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்தும்., மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தார்.

கொரோனா சோதனை
மேலும்., மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பரிசோதனை மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உள்நாடு மற்றும் வெளிநாடு என 68,867 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

கூடுதல் கவனம்
பிப்ரவரி மாதத்திலிருந்து வெளிநாடுகளிலிருந்து மதுரை வந்த குறிப்பாக சிங்கப்பூர், ஷார்ஜா, துபாய், இலங்கையிலிருந்து மதுரைக்கு வந்த 68,867 நபர்களிடமிருந்து சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொண்டதில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத் துறையினர் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications