உதயகுமாருக்கு பதில் சொல்ல நான் ஆள் இல்ல.. அவர் ஊழல் பத்தி பேச ஆரம்பிச்சா.. போட்டுத் தாக்கிய பிடிஆர்!
மதுரை : ஆர்.பி.உதயகுமருக்கு பதில் சொல்லும் ஆள் நான் இல்லை. அவர் செய்துள்ள ஊழல் குறித்து பேச ஆரம்பித்தால் நேரம் போதாது என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் மதுரைக்கு எந்தவொரு வளர்ச்சி திட்டமும் கொண்டு வரப்படவில்லை, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கொடூரமான ஊழல் நடைபெற்றுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்தார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.பி உதயகுமார் அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்பட்டது என்று பட்டியலிட்டுக் கூற முடியுமா என கேள்வி எழுப்பினார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக உள்ளது. இதை மதுரை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

பிடிஆருக்கு பதிலடி கேள்வி
மேலும், "கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை பகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், வாய்ச்சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் அமைச்சராக உள்ளீர்கள். மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் என்னென்ன சிறப்பு நிதியை கொண்டு வந்தீர்கள் என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் உங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்" எனத் தெரிவித்தார் ஆர்.பி.உதயகுமார்.

பிடிஆர் செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் இன்று மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மதுரை வட்டார மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வருவது முக்கியம் என்பது போல உண்மையில் வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குவது சிறு குறு தொழில் நிறுவனங்கள்தான். சிறு குறு நிறுவனங்கள் மிகவும் முக்கியமானது.

டெண்டர் விதிமுறைகள்
ஏற்கனவே சிறந்த கல்வி மாநிலமாக உள்ள தமிழகத்தில் இந்த நிறுவனங்களை உருவாக்குவது தமிழக முதல்வரின் முக்கிய இலக்கு. இந்த சிறு குறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை அரசாங்கமே பயன்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்கு விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் விதிமுறைகள் மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் பல நூறு நிறுவனங்கள் உருவாக்குவதற்கு இந்த நிகழ்வு அடித்தளமாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

உதயகுமார் ஊழல் பற்றி பேச நேரம் போதாது
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆர்.பி.உதயகுமார் பல்வேறு குற்றச்சாட்டு வைத்துள்ளது குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "ஆர்.பி.உதயாகுமருக்கு பதில் சொல்லும் ஆள் நான் இல்லை. ஆர்.பி.உதயகுமார் செய்துள்ள ஊழல் குறித்து பேச ஆரம்பித்தால் நேரம் போதாது. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை ஆணையம் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications