கருணாநிதிக்கு 6 அடி இடம் தராத எடப்பாடிக்கு நீங்கள் வாக்களிக்கலாமா.. ஸ்டாலின் கேள்வி
மதுரை: திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய 6 அடி இடம் தராத எடப்பாடிக்கு நீங்கள் வாக்களிக்கலாமா மு.க ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெருக்களில் நடந்து சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:
மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த பகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்கு அளித்து உள்ளீர்கள். இப்போது சட்டமன்ற தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. ஏ.கே.போஸ் போட்டியிட்ட போது ஜெயலலிதா சுயநினைவில்லாமல் இருந்த போது கை ரேகை வாங்கியது செல்லாது என்று சரவணன் வழக்கு போட்டு வெற்றி பெற்றதால் இந்த தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர். இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்து தான் எடப்பாடி ஆட்சி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதற்காக தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளேன்.

மத்தியில் மோடி தோற்பது உறுதி. மோடி தான் எடப்பாடி ஆட்சிக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்படி என்றால் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும் உறுதி என்றார். பின்னர் நேதாஜி நகர் கூத்தியார் குண்டு பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் பேசியதாவது,
தமிழகத்திற்கு நல்லது செய்த கலைஞர் இறந்த நேரத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய 6 அடி நிலம் கேட்டு எடப்பாடி வீட்டுக்கே நான் கனிமொழி உள்ளிட்டோர் சென்றோம். 6 அடி நிலம் கேட்டோம். ஆனால் அரசு மறுத்து விட்டது. நீதிமன்றம் கலைஞர் முதுபெரும் தலைவர் ஆகவே அவரது உடலை அங்கே அடக்கம் செய்யலாம் உத்தரவிட்டது நாங்கள் அடக்கம் செய்தோம்.
கலைஞருக்கு 6 அடி இடம் தராத எடப்பாடி அரசுக்கு நீங்கள் வாக்களிக்கலாமா என மக்களிடம் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என முதன்முதலில் கூறியது தி.மு.க.வோ மற்ற கட்சியினரோ அல்ல. அ.தி.மு.க.வின் தற்போதய துணை முதல்வர் ஒ.பி.எஸ்.தான்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த பொழுது அவரை பார்க்காமலேயே அவர் இட்லி சாப்பிட்டார் என பேட்டி அளித்தார்கள் அதிமுக அமைச்சர்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, பிண்ணனி உள்ளது என்பது தான் உண்மை. திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. பொய் சொல்லி வெற்றி பெற்றதால் தான் இடைத்தேர்தல் வந்துள்ளது.
தமிழகத்தில் வந்த புயலுக்கும் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை, நிதியும் சரியாக தரவில்லை. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கும் இரங்கல் தெரிவிக்காதவர் மோடி. விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யாதவர் மோடி. ஆனால் மிட்டா, மிராசு - நடிகர் நடிகைகளை தான் சந்தித்தார். ஆகவே அவரை தோற்கடிக்க வேண்டும் என சொல்கிறோம் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications