தேவர் தங்க கவசம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்குமே இல்லை..? 2017 முடிவு தானா? வங்கி அதிகாரிகள் பரபர ஆலோசனை
மதுரை : தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பும் கேட்டு வருவதால், வங்கி அதிகாரிகள் வேறொரு முடிவை எடுக்கப்போவதாக தகவல்கள் பரபரக்கின்றன.
முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஈபிஎஸ் ஆதரவாளரான திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி தென்மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவர் தங்கக் கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி மதுரை அண்ணா நகரில் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கியின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த குழப்பமான சூழலால், 2017-ஆம் ஆண்டு செய்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்கலாமா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் - பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
தங்கக் கவசம்
முத்துராமலிங்கத் தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை அதிமுக சார்பில் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்தோர் சமூக மக்களிடையே வரவேற்பைப் பெற்றார். அந்த கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையன்று அணிவிக்கப்படுகிறது.
ஓபிஎஸ்
இந்த தங்க கவசத்திற்கான முழு பொறுப்பும் அதிமுக பொருளாளர் வசம் வழங்கப்பட்டது. தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை அன்று அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்வார். இதற்காக மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் லாக்கரில் இருந்து தங்கக் கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் எடுத்து பசும்பொன்னில் விழா கமிட்டியாரிடம் கொடுத்து அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது.
வந்தது சிக்கல்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈபிஎஸ் தரப்பால் பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என ஓபிஎஸ் கூறி வருகிறார். இதனால், இந்த முறை தேவர் குருபூஜை அன்று தங்கக் கவசத்தை யார் பெறுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொருளாளர் யார்?
இந்த முறை அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் வங்கியில் இருந்து தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு அணிவிக்கப் போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஈபிஸ் தரப்பு பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கியில் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி தங்க கவசத்தை பெற்று தேவர் சிலைக்கு சிறப்பு செய்து முக்குலத்தோர் சமூக மக்களிடம் நற்பெயரை வாங்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மும்முரமாக உள்ளது.
காய்நகர்த்தும் ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ, இந்த முறையும் ஓ.பன்னீர்செல்வமே தேவர் நினைவிடத்துக்கு தங்கக் கவசத்தை கொண்டு வந்து அணிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்காக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். மதுரை வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி ஓபிஎஸ் தரப்பின் சார்பில் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், எம்.பி தர்மர் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
கௌரவ பிரச்சனை
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் சூழலால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு யார் தங்க கவசத்தை பெற்றுத் தருவது என்பதிலும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைக் காட்ட ஓபிஎஸ்ஸும், அதே சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான மாஜிக்களுக்கும் இடையே இது ஒரு கௌரவ பிரச்சனையாக மாறியுள்ளது.
தலையைப் பிய்த்துக்கொள்ளும் அதிகாரிகள்
இதையடுத்து, இரு தரப்பும் தங்கக் கவசம் கோரி உள்ளதால், இருவரில் யாரிடம் கவசத்தை ஒப்படைப்பது என்பதில் வங்கி அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புமே தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களை அளித்துள்ளதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தேவர் தங்கக் கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி மதுரை அண்ணா நகரில் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கியின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம்
நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன் இருவரில் யார் ஒருவருக்கு தங்க கவசத்தை கொடுத்தாலும் நீதிமன்றத்தை மீறி செயல்பட்டதாக எதிர் தரப்பினர் வழக்கு தொடரக் கூடும் என்பதால் இதுகுறித்து வங்கி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பிற்கும் இல்லாமல், மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
2017ல் நடந்த சம்பவம்
ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே பிரச்சனை ஏற்பட்டபோது ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர்களை தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரு தரப்பினருக்கும் தேவர் தங்கக் கவசம் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர்தான் தங்க கவசத்தைப் பெற்று தேவர் குருபூஜை முடிந்ததும் மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார். அதேபோல் தற்போதும் மாவட்ட நிர்வாகத்திடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் வங்கி நிர்வாகம் விளக்க அறிவிப்பு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.