பெட்டி பெட்டியாய் பணம்! அள்ள அள்ள குறையாத ஆவணங்கள்! மிரண்டு போன ஐடி அதிகாரிகள்! பரபர பின்னணி..!
மதுரை : மதுரையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அங்கு மட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதேபோல் சோதனை நடைபெறுவது அடுத்தடுத்து வெளியான தகவல்களின் படி உறுதியானது.

வருமான வரித்துறை சோதனை
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய இரு பகுதிகளில் ஆர் ஆர் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் கன்ஸ்ட்ரக்ஷனிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

வரி ஏய்ப்பு புகார்
இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதேபோல், மதுரையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் அன்னை பாரத் சிட்டி மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களின் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுக்கட்டாக பணம்
இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றனர். கைப்பற்றப்பட்ட பணத்தை நான்கிற்கும் மேற்பட்ட பெட்டிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார், நள்ளிரவு நேரத்தில் இரண்டு கார்களில் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. மேலும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3வது நாளாக சோதனை
பல்வேறு ஆணவங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 3வது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினரின் சோதனைக்குப் பிறகே, முழுமையான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த அதிரடி சோதனை இன்னும் வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் தொடரும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications