ஜோக்கர், அரக்கன், அசுரன்.. போர் முனை முதல் கிராண்ட்ஸ்லாம் கிங் வரை.. யார் இந்த ஜோகோவிச்?
சிறு வயது முதல் ஆஸ்திரேலியா ஓபன் வெற்றி வரை ஜோகோவிச்சின் பயணத்தை பற்றி பார்க்கலாம்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 10வது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார். யார் இந்த ஜோகோவிச்? ஏன் வெற்றிபெற்றதற்கு பின் அப்படியொரு கொண்டாட்டம்? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
டென்னிஸ் விளையாட்டு முழுக்க முழுக்க மனிதர்களின் மனஉறுதியை கேள்விக்குள்ளாக்கும் விளையாட்டு. முதல் செட்டை கோட்டைவிட்டால், மீண்டு வருவதற்குள் எதிராளி நம் மனஉறுதியை மிக எளிதாக பலவீனமடைய செய்து ஆட்டத்தை முடித்திருப்பார். அந்த 78 அடி அங்குலம் கொண்ட டென்னிஸ் கோர்ட், நம் மன உறுதி அதிகரிக்கவும் செய்யும்., சுக்குநூறாக உடைத்து போடவும் செய்யும்.
அப்படிப்பட்ட விளையாட்டில் நடாலும், ஃபெடரரும் முடிசூடா மன்னர்களாக கோலோச்சியிருந்த காலத்தில் தான் ஜோகோவிச் களம் புகுந்தார். நடாலுக்கு உடல் உழைப்பு பலம் என்றால், ஜோகோவிச்சிற்கு மனஉறுதி தான் பலம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கிரிக்கெட்டில் டிராவிட்டை போல்.
ஈரானில் பயங்கர நிலநடுக்கம்.. 7 பேர் பலி - 400 பேர் படுகாயம் - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்
ஜோகோவிச்
தடுப்பாட்டம் மூலம் எதிரணி வீரர்களின் மன உறுதியை சிறிது சிறிதாக உடைத்து, அடுத்த சில மணி நேரங்களில் சிம்மாசனமிட்டு அமர்வாரே, அதே பாணிதான் ஜோகோவிச்சின் பாணியும். ஆட்டத்தின் தொடக்கத்தில் எந்தவித முயற்சியையும் ஜோகோவிச் எடுக்க மாட்டார். எதிரில் நிற்கும் வீரர் தவறு செய்வதற்காக காத்திருப்பார். அந்த தவறுக்காக 100 ரேலிகள் சென்றாலும், பொறுமையாக இருப்பார். சிறிய தவறு செய்தால் போதும், ஜோகோவிச் தன்னுள் இருக்கும் அரக்கனை வெளிக்காட்டிவிடுவார்.
போருக்கு நடுவில் ஜோகோவிச்
செர்பியாவில் பிறந்த ஜோகோவிச், சிறு வயது முதலே போர்களுக்கு நடுவில் வாழ்ந்ததால், இயற்கையாகவே போராடுவதற்கு கற்றுக் கொண்டவர். போர் காலத்தில் சரியான தூக்கம் இருக்காது, போதுமான சாப்பாடு கிடைக்காது, ஏன் குழந்தைகள் பள்ளிக்கும் கூட செல்ல முடியாது. இவையனைத்தையும் குழந்தை பருவத்திலேயே சந்தித்தவர் ஜோகோவிச். டென்னிஸ் கோர்ட்டில் விளையாட முடியாமல் ஸ்விம்மிங் பூலில் பயிற்சியை மேற்கொண்டவர். இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில், பள்ளிக்கு செல்லாத நாட்களில் தான் ஸ்விம்மிங் பூலில் இன்னும் அதிக பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன் என்பார்.
2012 ஆஸ்திரேலியா ஓபன்
போர் சூழல் ஜோகோவிச்சின் மனஉறுதியை நாளுக்கு நாள் அதிகப்படுத்தியது. அதுவே ஜோகோவிச்சை போராடும் மனிதனாக மாற்றியது. இப்படியே டென்னிஸ் களத்தில் கால்பதித்து ஜோகோவிச் உச்சத்தை எட்டியது 2012ம் ஆண்டு. ஜோகோவிச் ரசிகர்கள் மறந்திருந்தாலும், நடால் ரசிகர்களால் அதனை எளிதாக மறக்க முடியாது. ஆம், இதே ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தான். அன்று நடால் - ஜோகோவிச் மோதும் போது உலகமே கண் சிமிட்டாமல் பார்த்தது. முதல் செட்டே டை ப்ரேக்கர் வரை செல்ல, நடால் போராடி கைப்பற்றினார்.
போர் வீரன்
இதன் பின்னர் 2 மற்றும் 3 ஆகிய செட்களை ஜோகோவிச் கைப்பற்ற, 4வது செட்டில் நடாலுக்குள் இருந்த போர் வீரன் வெளிவந்தான். 4வது செட்டை கைப்பற்றிய பின், வெற்றிபெற்றதற்கு இணையான மகிழ்ச்சியை நடால் வெளிப்படுத்தினார். ஆனால் 5வது செட்டில் ஜோகோவிச் அசாத்தியத்தை நிகழ்த்திவிட்டு கத்திய சத்தம் டென்னிஸ் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது. இளம் வயதில் இருக்கும் வீரர்கள் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இயல்பு என்றாலும், வயதான பின்னரும் அதேபோன்ற ஆட்டத்தை ஜோகோவிச் வெளிப்படுத்தி வருவது தான் அவரை அரக்கன் என்று அழைப்பதற்கு காரணமாக அமைகிறது.
ஆஸ்திரேலியா ஓபன் 2022
மன உறுதி மூலம் டென்னிஸின் உச்சத்தை எட்டிய ஜோகோவிச், அதே மன உறுதியால் சில பிரச்சினையும் எதிர்கொண்டார். கொரோனா பரவலின் போது, தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எங்கள் நாட்டிற்குள் அனுமதிப்போம் என்று ஆஸ்திரேலியா அறிவித்தது. இதனை கடந்து ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பங்கேற்க வந்த ஜோகோவிச், ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு வேறு வழியில்லாமல் நாடு திரும்பினார். உலகமே அவருக்கு எதிராக கருத்து கூறியது.
தடுப்பூசி விவகாரம்
ஆனால் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மனநிலையில் இருந்த ஜோகோவிச்சின் மன உறுதியை யாராலும் உடைக்க முடியவில்லை. எந்த ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பங்கேற்க முடியாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டாரோ, அதே ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் கெத்தாக ஸ்டைலாக வென்றிருக்கிறார். 90களில் பிறந்த டென்னிஸ் வீரர்களால் ஜோகோவிச் முன்னால் நின்று ஒரு செட்டை கூட வெல்ல முடியவில்லை.
கண்ணீருடன் கொண்டாட்டம்
ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் 10வது முறையாக வென்றுவிட்டு, தனது குழுவினருடன் கண்ணீரில் கொண்டாடினாரே, அதுதான் ஜோகோவிச். இந்த வெற்றி அவருக்கு அத்தனை தேவையானதாக இருந்தது. தான் புறக்கணிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் வந்து வெற்றியை ஈட்டுவது எந்தவொரு மனிதனுக்கு ஸ்பெஷல் தான். அதுவும் விளையாட்டு வீரனுக்கு இன்னும் ஸ்பெஷல். இந்த வெற்றியுடன் அதிக கிராண்ட்ஸ்லாம் தொடர் வென்ற நடாலின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
ஜோகோவிச்சின் அறைகூவல்
ஆனால் ஜோகோவிச்சின் சாதனை இத்துடன் நிற்கப் போவதில்லை. அடுத்து வரும் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்கா ஓபன் என்று தொடரப் போகிறது. டென்னிஸ் உலகம் இனி வரலாற்றில் நடக்காத பேரதியத்தை காண தயாராக இருக்க வேண்டும் என்று ஜோகோவிச் விடுத்த அறைகூவல் தான் ஆஸ்திரேலியா ஓபன் வெற்றி.
அரக்கன்
ஏன் அரக்கன், அசுரன், ஜோக்கர் என்று எதிர்மறைவான பட்டப்பெயர்கள் ஜோகோவிச்சிற்கு சூட்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அவரின் ஆட்டத்தை ஒருமுறை காணுங்கள். எதிரில் நின்று விளையாடும் வீரனுக்கு ஒரு துளியளவு கூட கருணை ஜோகோவிச் கண்களில் பார்க்க முடியாது. ஆம், களத்தில் இறங்கிவிட்டால் ஜோகோவிச் அரக்கனாக தான் இருப்பார். அந்த அரக்கன் இன்னும் சில ஆண்டுகள் கற்பனைக்கு எட்டாத சாதனைகளை படைக்க போகிறார்.