பறவையை காப்பாற்ற நடுரோட்டில் காரை நிறுத்திய தொழிலதிபர்.. அடுத்து படார் என வந்த சத்தம்! ஒரே பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பாலம் ஒன்றில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மனித இனத்தின் அபரிவிதமான வளர்ச்சி காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் காடுகள் அழிக்கப்படுகிறது. இதனால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் வாழ்விடங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.
யானை செல்லும் பாதைகளில் அமைக்கப்படும் ரயில் பாதைகளில் அடிப்பட்டு யானைகள் உயிரிழப்பதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கும் மனித மிருக மோதலே முக்கிய காரணம்.

மும்பை
இந்தச் சூழலில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சாலையில் அடிப்பட்டுக் கிடந்த பறவையைக் காப்பாற்றச் சென்ற தொழிலதிபருக்கு நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி மேம்பால மெயின் ரோட்டில் தொழிலதிபர் ஒருவரும் அவரது ஓட்டுநரும் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது நடுரோட்டில் பறவை ஒன்று அடிப்பட்டு கிடந்துள்ளது.

விபத்து
அதைப் பார்த்ததும் பறவையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த 43 வயதான தொழிலதிபர் தனது டிரைவருடன் சென்று பறவைக்கு உதவ முயன்றுள்ளார். அப்போது அங்கு அதிவேகமாகச் சென்ற டாக்ஸி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதி உள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்த தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவரது டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் பலியாகி உள்ளார்.

சிசிடிவி
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்து கடந்த மே 30ஆம் தேதி மதியம் நடந்துள்ளது. அப்போது தொழிலதிபர் அமர் மனிஷ் ஜரிவாலா, மலாட் என்ற பகுதிக்குச் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதிவேகமாகக் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீஸ்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "தொழிலதிபர் காரில் அடித்துத் தான் அந்த பறவை காயம் அடைந்துள்ளது. அதைக் காக்கச் செல்லும் போது தான் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்" என்றார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக டாக்சி டிரைவர் ரவீந்திர குமார் ஜெய்ஸ்வர் (30) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications