மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரம் : 55ஆயிரம் பேர் பாதிப்பு - அக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் 55 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில அரசு கவலையடைந்துள்ளது.
மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 55ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அம்மாநில அரசு கவலையடைந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு மாறிய வைரஸ் காரணமாகவே வைரஸ் பரவல் அதிகரித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததும் வைரஸ் பரவல் அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மராட்டியத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி தினசரி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு லாக்டவுன் கடைப்பிடிக்கப்படும். அதேபோல வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இடத்தில் ஐந்து அல்லது அதிகமானவர்கள் ஒன்றுகூடக் கூடாது. மால்கள், உணவகங்கள், பார்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல வழிபாட்டுத்தளங்களையும் மூட அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் சனிக்கிழமை 49,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் திங்கட்கிழமை 55 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து மராட்டியத்தில் ஒரு நாளில் பதிவான கொரோனா வழக்குகளில் இதுதான் அதிகம்.
மும்பையில் ஒரே நாளில் 10,030 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 31 பேர் மரணமடைந்துள்ளனர். புனோவில் 11040 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 34 பேர் மரணமடைந்துள்ளனர். நாசிக்கில் 4350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 24 பேர் மரணமடைந்துள்ளனர்
நாக்பூரில் கொரோனாவிற்கு 3753 பேர் பாதிக்கப்பட்டனர். 35 பேர் மரணமடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மூத்த குடிமக்கள், முன்கள பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications