உண்மையான வீடியோ மாதிரியே இருந்துச்சு... நம்பி ஏமாந்த நடிகை கங்கனா; ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்
மும்பை: கத்தார் ஏர்வேஸ் தலைவரை பகடி செய்து வெளியிடப்பட்ட வீடியோவை உண்மையென நம்பி, நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நடிகை கங்கனா ரனாவத் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி எப்போதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார். சினிமாவைக் கடந்து இவரது அரசியல் கருத்துகள் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் கத்தார் ஏர்வேஸ் சிஇஓ அக்பரை பகடி செய்து வெளியிடப்பட்ட வீடியோவுக்கு கங்கனா பதிவிட்டுள்ள கருத்துகள் மக்களிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது.
இது ஆப்கானிஸ்தான் இல்ல! நுபுர் சர்மாவுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கு! ஆதரவாய் வந்த கங்கனா ரனாவத்!
நுபுர் ஷர்மா சர்ச்சை
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா பேசிய கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் இருந்து கண்டனங்கள் வந்தன. இதையடுத்து நுபுர் ஷர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் #Bycottqatarairways என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது. இதனைத்தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ அக்பர் அல் பேக்கரை, ட்ரால் செய்து ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
நுபுர் ஷர்மாவுக்கு கங்கனா ஆதரவு
இந்தநிலையில் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து கங்கனா கூறுகையில், நுபுர் ஷர்மாவுக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. அதற்கு அவர் தகுதியானவர். எல்லா வகையான அச்சுறுத்தல்களும் அவரை குறிவைத்து வருவதை காண்கிறேன். இந்து கடவுள்கள் அவமதிக்கப்படும் போது நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம். அதனை நீங்களும் செய்யுங்கள். இது ஆஃப்கானிஸ்தான் அல்ல என்று தெரிவித்தார்.
ட்ரால் வீடியோவில் என்ன உள்ளன?
இந்தநிலையில், கத்தார் ஏர்வேஸ் சிஇஓவை பகடி செய்து நெட்டிசன்களால் வீடியோ ஒன்று வெளியிட்டது. கிண்டல் கேலியுடன், டப்பிங் செய்யப்பட்ட அந்த வீடியோவில், அக்பர் அல் பேக்கர் புறக்கணிப்பை கைவிடுமாறு நெட்டிசன் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தது போல் உள்ளது. நெட்டிசனின் ரூ.624.50 முதலீடு எங்களின் மிகப்பெரிய பங்கு. இந்த புறக்கணிப்பால் இனி எப்படி செயல்படுவது என்று தெரியவில்லை. அனைத்து விமானங்களையும் தரையிறக்கிவிட்டோம். எங்கள் விமானங்கள் இனி இயங்காது என்று அக்பர் பேசுவது போல் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
நம்பி ஏமாந்த கங்கனா
இதனை உண்மை என நம்பி நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, ஒரு ஏழையை கேலி செய்யும் முட்டாளை உற்சாகப்படுத்தும் இந்தியர்கள் அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என்று நடிகை கங்கனா எழுதியுள்ள பதிவு இணையவாசிகள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்தப் பதிவை கங்கனா நீக்கியது குறிப்பிடத்தக்கது.