மகாராஷ்டிரா அமைச்சரவையில் அனைவரும் குபேரர்கள்! ஆனால் 20ல் 15 பேர் மீது கிரிமினல் வழக்கு! பரபர தகவல்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட 20 பேரும் கோடீஸ்வரர்கள் எனவும் இதில் 15 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி முறிந்தது.
இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.

உத்தவ் தாக்கரே ராஜினாமா
இந்த கூட்டணி ஆட்சி கடந்த இரண்டை ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில் தான் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி மீதான அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி திரண்டனர். கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த 30க்கும் அதிகமானவர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் சென்றதால் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சரவை விரிவாக்கம்
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. முதல் அமைச்சராக ஏக்நாத் ஷிண்டே உள்ள நிலையில் துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் 9 பேர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 9 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். இதனால் தற்போது முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 20 பேர் அமைச்சரவையில் உள்ளனர்.

20ல் 15 பேர் மீது கிரிமினல் வழக்கு
இந்த நிலையில் தான் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அமைச்சரவையில் உள்ள 20 பேரில் 15 பேர் மீது கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இதன்மூலம் அமைச்சரவையில் உள்ளவர்களில் 75 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளை சந்தித்துள்ளனர் என்பது வெளிச்சாமகி உள்ளது. மேலும் 13 பேர் கடும் குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
அதோடு 8 பேர் 10 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விபரம் வெளியாகி உள்ளது. மேலும் 11 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பை படித்துள்ளனர். ஒரு அமைச்சர் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். 4 பேர் 41 முதல் 50 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 51 வயதில் இருந்து 70 வயதுக்குள்ளும் உள்ளனர்.

அனைவரும் கோடீஸ்வரர்கள்
2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மந்திரிகளின் சுய பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் அனைவரும் கோடீஸ்வரராக உள்ளனர். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.47.45 கோடியாக உள்ளது. இதில் மலபார் ஹில் தொகுதியைச் சேர்ந்த மங்கள் பிரபாத் லோதா 441.65 கோடிக்கு சொத்து வைத்துள்ளார். இவருக்கு தான் அதிக சொத்து உள்ளது. மிகக்குறைவாக ரூ. 2.92 கோடி மதிப்பிலான சொத்துகளை பைதான் தொகுதியைச் சேர்ந்த பூமாரே சந்தீபன்ராவ் ஆசாராம் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications