2 எஸ்யுவிகள்.. பிபிஇ கிட் அணிந்த மர்ம நபர்.. அம்பானி வெடிகுண்டு மிரட்டலில்... பரபரப்பு திருப்பங்கள்
மும்பை: முகேஷ் அம்பானி வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் நிரம்பிய காரை பிபிஇ கிட் அணிந்த மர்ம நபர் ஒருவர் வைத்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய எஸ்யுவி கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எஸ்யுவி கார் முழுவதும் 2.5 கிலோ எடையுள்ள 20 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை செய்து வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கை மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியப் பாதுகாப்பு முகமை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
பிபிஇ கிட் அணிந்த மர்ம நபர்
இதன் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அம்பானியின் வீட்டின் அருகே ஸ்கார்பியோ காரில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னாலேயே ஒரு இன்னோவா காரும் வந்துள்ளது. அப்போது ஸ்கார்பியோ காரிலிருந்து வெளியேறிய ஒரு நபர், அந்த இன்னோவா காரில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளார். மேலும், அந்த நபர் சுகாதார ஊழியர்கள் அணியும் பிபிஇ கிட்டை அணிந்துள்ளார்.
இரண்டு மர்ம கார்கள்
இதனால் அந்க நபர் யார் என அறிவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேநேரம் மும்பை நகரில் இருக்கும் மற்ற சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் அன்று காலை முதலே, அந்த இரண்டு கார்களும் ஒன்றாக மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த இன்னோவா கார் குறித்த தகவல்களையும், அந்த கார் எங்கெல்லாம் சென்றது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலீசுக்கு தொடர்பு
இந்நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். முகேஷ் அம்பானி வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் மும்பை காவல்துறையின் 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' ஏபிஐ சச்சின் வாஸை கைது செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். நான்கு மாதங்களுக்கு முன் வரை, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ காரை ஏபிஐ சச்சின் வாஸ்தான் வைத்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
கார் உரிமையாளர்
இந்த எஸ்யுவி காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரென் என்பவரின் உடல், உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அருகே கண்டுபிடிக்கப்பட்டது, இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "மன்சுக் ஹிரெனை போலீசில் சரணடையச் சொல்லி சச்சின் வாஸ் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மன்சுக் அதைக் கேட்காமல் முன் ஜாமின் பெற முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில்தான் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பரபரப்பு குற்றச்சாட்டு
இதுமட்டுமின்றி மன்சுக்கின் மொபைல்போன் கடைசியாக சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தனஞ்சய் காவ்தே அலுவலகத்திற்கு அருகிலேயே பதிவாகியுள்ளது. இவை சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. ஏற்கனவே சிவசேனா தனஞ்சய் காவ்தேக்கும், அந்த போலீஸ் அதிகாரியும் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர், இதில் சச்சின் வாஸை கைது செய்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும்" என்றார்.