மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம்: சிவசேனா- என்சிபி கூட்டணிக்கு குட்பை சொல்லும் காங்கிரஸ்?
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ளுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் பதவி ஏற்றார். அம்மாநில துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.
இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே அரசுக்கான முதல் அக்னி பரீட்சையாக சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிவசேனா வேட்பாளருக்கு 107 வாக்குகள்தான் கிடைத்தன.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நேற்று நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்க்கட்சியான காங்கிரஸில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் சவாண் உட்பட 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிரான வாக்குகள் எண்ணிக்கை 99 ஆக குறைந்தது.
இந்த 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், டிராபிக் காரணமாக சட்டசபைக்கு தாமதமாக வந்தோம் என கூறியுள்ளதுதான் பெரும் நகைச்சுவையாக உள்ளது. இது தொடர்பாக மும்பை மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், சிவசேனா- என்சிபியுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ள வேண்டும் என்கிற குமுறல் காங்கிரஸில் இருந்து வருகிறது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடனும் தொடர்பில் இருக்கின்றனர். இந்த குமுறல்கள், கட்சி தாவல்கள் எல்லாமும்தான் 11 எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காததன் காரணம் என்கின்றனர்.