ஏக்நாத் ஷிண்டேக்கு உடல் நலக்குறைவு.. “லிஸ்டுடன்” டெல்லி பறந்த பட்னவிஸ் - மகா. அரசியலில் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்க அம்மாநில துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் டெல்லி சென்றுள்ளார்.
மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் உள்ள விடுதியில் முகாமிட்டனர். அதன் பின்னர் அசாமில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கினர்.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியை காப்பாற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

புதிய அரசு
இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஆனால், அமித்ஷாவின் யோசனைபடி ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார் தேவேந்திர பட்னவிஸ். அன்று முதல் மகாராஷ்டிரா அரசு தரப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள்
துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார்கள். ஆனால், இதர இலாக்காக்களில் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர். மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ், சிவசேனா, பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

அமைச்சரவை பட்டியல்
புதிய அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் டெல்லியில் பாஜக தலைமையிடம் ஒப்புதல் பெற்று அவர்களை அறிவித்து பதவி பிரமானம் செய்து வைக்க திட்டமிடப்பட்டது. முன்னதாக கடந்த ஜூலை 27 ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலுடன் ஏக்நாத் ஷிண்டேவும், தேவேந்திர பட்னவிசும் டெல்லி சென்றனர். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஷிண்டேவுக்கு உடல்நலக்குறைவு
இந்த நிலையில் இன்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தேவேந்திர பட்னவிஸ் மட்டும் அமைச்சரவை பட்டியலுடன் டெல்லிக்கு சென்று இருக்கிறார். இந்த பட்டியலுக்கு பாஜக தலைமை ஒப்புதல் வழங்கினால் அடுத்த நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?
முதலமைச்சருடன் சேர்த்து அதிகபட்சம் 43 அமைச்சர்களை நியமிக்க முடியும். இதில் ஏக்நாத் ஷிண்டேவுடன் குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் விடுதிகளில் தங்கி இருந்தவர்கள், ஆரம்பகாலத்தில் அவருடன் துணை நின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முந்தைய பாஜக ஆட்சியில் முக்கிய இலாக்காக்களில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications