உச்சமடையும் உட்கட்சி மோதல்.. சிவசேனாவின் "வில் அம்பு" சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்
மும்பை: மகாராஷ்டிராவில் தாக்கரே மற்றும் ஷிண்டே தரப்பிற்கு இடையே மோதல் தொடரும் நிலையில், சிவசேனா சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தாக்கரே தலைமையில் இருந்த கூட்டணி அரசை சிவசேனா எம்எல்ஏக்களே கவிழ்த்தனர்.
ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இடையேயான மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர்.
கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றின் இரு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு ஷிண்டே தரப்பிற்கு இருப்பதால், அவர்கள் மீது தாக்கரேவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. பாஜக உடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதல்வரானது மட்டுமின்றி, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும் கட்சி அலுவலகம் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி போர்க்கொடி தூக்கினார்.
மேலும், இரு தரப்பும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சின்னம் முடக்கப்பட்டு உள்ளதால், மும்பையின் அந்தேரி கிழக்கில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த வேண்டும்.