சரத்பவார் விவகாரம்... மகாராஷ்டிரா அரசியலில் ஜெகஜோதியாய் எரியும் அமித்ஷா பற்ற வைத்த நெருப்பு!
மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பூடகமான அரசியல் பதிலால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
முகேஷ் அம்பானி அருகே வெடிகுண்டுகளுடனான கார் ஒன்று பிடிபட்ட விவகாரத்தில்தான் சிவசேனா கூட்டணி அரசுக்குள் புகைச்சல் தொடங்கியது. இந்த வெடிகுண்டு கார் பறிமுதல் வழக்கு விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர சிங் பந்தாடப்பட்டார்.
ஆனால் பரம்வீர சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சரான (தேசியவாத காங்கிரஸ்) அனில் தேஷ்முக் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதுவும் மாதம் ரூ100 கோடி மாமூல் வசூலித்து தர உத்தரவிட்டார் அனில் தேஷ்முக் என்பதுதான் விஸ்வரூபம் எடுத்தது.
கூட்டணியில் விரிசல்
இதையத்து அனில் தேஷ்முக் பதவியை காலி செய்ய வேண்டும் என சிவசேனா விரும்பியது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவ சரத்பவார் இதனை விரும்பவில்லை. இதனால் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டது.
சஞ்சய் ராவத்தால் சர்ச்சை
இந்த விரிசலை பெரிதாக்கும் வகையில், அனில் தேஷ்முக் எதிர்பாராதவிதமாக அமைச்சரானவர்; தேசியவாத காங்கிரஸின் ஜெயந்த் பாட்டீல், திலீப் வல்சே பாட்டீல் இருவரும் உள்துறை அமைச்சர் பதவியை ஏற்க மறுத்ததால் அனில் தேஷ்முக் அமைச்சராக்கப்பட்டார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்த கருத்தால் தேசியவாத காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
அதிருப்தியில் என்.சி.பி.
தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், கூட்டணி அரசாங்கத்தை நாசமாக்கும் வகையில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என காட்டமான பதிலடி கொடுத்தார். இந்த அஜித்பவார்தான் ஏற்கனவே பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்று பின்னர் தேசியவாத காங்கிரஸ் முகாமுக்கு திரும்பியவர்.
அமித்ஷா- சரத்பவார் சந்திப்பா?
இப்படி மகாராஷ்டிரா அரசியலில் பஞ்சாயத்துகள் வெடித்து கொண்டிருக்க அமித்ஷாவை சரத்பவாரும் பிரபுல் பட்டேலும் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர் என ஒரு தகவல் தீயாய் பரவியது. இதனை தேசியவாத காங்கிரஸ் தரப்பு மறுத்து வருகிறது.
அமித்ஷா பற்றவைத்த நெருப்பு
ஆனால் அமித்ஷாவோ, சரத்பவாருடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு எல்லாவற்றையும் பகிரங்கமாக சொல்ல முடியாது என பூடகமாக கொளுத்திப் போட்டார். அப்புறம் என்ன இப்போது மகாராஷ்டிரா அரசியலில் திகுதிகுவென அமித்ஷா பற்ற வைத்த பெருநெருப்பு ஜெகஜோதியாய் எரிந்து கொண்டிருக்கிறது. அனேகமாக சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசை காவு வாங்காமல் இந்த நெருப்பு ஓயாது போல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.