மகாராஷ்டிர அரசியலில் தலைகீழ் மாற்றம்! தேவேந்திர பட்னாவிஸை ஒதுக்கும் பாஜக? வீழ்ச்சியில் 'நட்சத்திரம்'
மும்பை: அடுத்த தலைமுறைக்கான இந்துத்துவா தலைவர், மகாராஷ்டிராவின் புதிய முகம் என்றெல்லாம் பாஜக கட்சியால் துவக்கி வைக்கப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கட்சியில், தனது செல்வாக்கை இழந்து வருகிறார், என்பதை கட்சி மேலிடம் சமீபகாலமாக எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த மூன்று நாட்களாக நடந்த சில சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். வினோத் தாவ்டே தேசிய செயலாளராக இருந்து பாஜக பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தலுக்கு சந்திரசேகர் பவான்குலேவை நியமித்ததும் பட்னாவிஸ் புறம் தள்ளப்படுகிறார் என்பதை உறுதி செய்கின்றன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களின்போது பாஜகவின் முகமாக தேவேந்திர பட்னாவிஸ் இருப்பாரா என்பதை சந்தேகக்குறியாக்குகிறது இந்த நிகழ்வுகள்
வீட்டின் பூஜை அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நர்ஸ்... ஆண்டிபட்டியில் அதிர்ச்சி
ஒதுக்கி வைத்த தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆட்சி காலத்தில் வினோத் தாவ்டேயை ஒதுக்கியே வைத்திருந்தார். கல்வித் துறை அமைச்சராக இருந்த அவரை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றியபடி இருந்தார் தேவேந்திர பட்னாவிஸ். 2019ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது வினோத் தாவ்டேவிற்கு கட்சியிலிருந்து போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போவதையும் தேவேந்திர பட்னாவிஸ் தனது செல்வாக்கை பயன்படுத்தி உறுதி செய்தார். இதேபோலத்தான் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சரான சந்திரசேகர் பவான்குலே புறக்கணிக்கப்பட்டார். நாக்பூரைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவின் முக்கிய தலைவரான இவருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. விதர்ப்பா பிராந்தியத்தில் பாஜக சுமார் 6 தொகுதிகளில் தோற்க, இந்த முடிவு காரணமாக இருந்தது.
கட்சி செல்வாக்கு
"தாவ்டே மற்றும் பவன்குலேவிற்கு வழங்கப்பட்டுள்ள மறுவாழ்வு, ஃபட்னாவிஸின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதை சுட்டிக் காட்டுகிறது. அவருடைய திறமையையோ நேர்மையையோ கேள்விக்குள்ளாக்கவில்லை என்றாலும், கட்சி யதார்த்த அரசியலை புரிந்து செயல்படுகிறது. நரேந்திர மோடியை தலைவராக காண்பித்து நாடு முழுக்க வாக்குகளை பெறுவது மத்திய அரசியலுக்கு ஓகேதான். ஆனால், 2024 தேர்தலில் மகாராஷ்டிராவில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது. ஓபிசி மற்றும் மராத்தா சமூகத்தை பாஜக பகைக்க முடியாது," என்று பாஜக துணைத் தலைவர் ஒருவர் கூறினார். தாவ்டே மற்றும் பவன்குலேவுக்கு டிக்கெட் வழங்க மறுத்த முடிவு "ஒரு தவறு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் நடவடிக்கைகள்
பட்னாவிஸால் ஓரங்கட்டப்பட்ட மற்றொரு தலைவர், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் ராவ்சாகேப் தன்வே, இப்போது மத்திய ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகங்களில் இணை அமைச்சராக்கப்பட்டுள்ளார். "அரசியலில் பொறுமைக்கு பலன் உண்டு. இது கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களுக்கும் முக்கிய செய்தியாகும், "என்று தவ்டே தெரிவித்தார்.
ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டு
ஃபட்னாவிஸால் ஓரங்கட்டப்பட்டு பாஜகவில் இருந்து விலகி என்சிபியில் சேர்ந்த ஏக்நாத் கட்சே, இதுபற்றி கூறுகையில், "ஃபட்னாவிஸ் மோசமான அரசியல் செய்தார். கட்சிகள் இருந்த தனது அனைத்து அரசியல் போட்டியாளர்களையும் ஒதுக்கினார். மத்திய தலைமையின் நம்பிக்கையை அவர் பெற்றிருந்ததால் இது நடந்தது. ஆனால் விரைவில், விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும். அவர் கொடுத்த தொல்லைகளால் சோர்ந்து பாஜகவில் இருந்து விலகினேன். நான் பாஜகவை விட்டு வெளியேறியது ஃபட்னாவிஸால் மட்டுமே, "என்று ஏக்நாத் கட்சே தெரிவித்துள்ளார்.