ம.பி., மகாராஷ்டிராவில் காந்தி கொலையாளி கோட்சேவுக்கு வீரவணக்கம் செலுத்திய இந்துத்துவா அமைப்புகள்!
மும்பை: மகாராஷ்டிராவில் கர்னி சேனா என்ற இந்துத்துவா கும்பல் ஒன்று நாட்டின் தந்தை மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த பயங்கரவாதி நாதுராம் கோட்சேவுக்கு வீரவணக்கம் செலுத்தும் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆங்கிலேயர் பேராதிக்கத்தில் இருந்து இந்திய நிலத்தை அகிம்சை வழியில் விடுவித்து சுதந்திரம் பெற்றுத் தந்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி தேசம் சுதந்திர காற்றை சுவாசித்த சில மாதங்களிலேயே அப்பேரதிர்ச்சி நம் மண்ணில் நிகழ்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதப் படுகொலை.. ஆம் தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்!
1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை நிகழ்த்திய வலதுசாரியாளன் நாதுராம் கோட்சே கையும் களவுமாக பிடிபட்டான். இப்படுகொலை வழக்கில் நாதுராம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டு இதே நவம்பர் 15-ந் தேதி நாதுராம் கோட்சேவின் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றமும் அதுதான்.
பர்தா அணிய மறுப்பு.. இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்றாததால் மனைவி கொலை.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
இந்துத்துவா கோட்சே
நாதுராம் கோட்சே, இந்து மகாசபையின் உறுப்பினராக இருந்தவர். அதற்கு முன்னதாக இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினராக இருந்தார் என்கிற சர்ச்சையும் கூட உண்டு. மகாத்மா காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி நாதுராம் கோட்சேவை காலந்தோறும் வலதுசாரிகள் ஒரு தியாகியாக கொண்டாடுகிற பேரவலமும் உண்டு.
மகாராஷ்டிராவில் வீரவணக்கம்
இந்த வரிசையில் இன்று நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் என்பதால் அவருக்கு மகாராஷ்டிராவில் கர்னி சேனா என்ற வலதுசாரி கும்பல் வீரவணக்க அஞ்சலி செலுத்தி இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாதுராம் கோட்சே வாழ்க! ஜிந்தாபாத் ஜிந்தாபாத்! நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்கிற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
ம.பி.யில் ஆரத்தி
இதேபோல் மத்திய பிரதேசத்திலும் நாதுராம் கோட்சே வீரவணக்க நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் இந்துமகாசபையினர் இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். இதிலும் நாதுராம் கோட்சேவுக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் கோட்சே படத்துக்கு ஆரத்தி எடுத்து வழிபாடும் நடத்தினர்.
காங். கொந்தளிப்பு
ம.பி. இந்து மகாசபையினரின் இந்த செயலை அம்மாநில காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், நாட்டின் முதலாவது பயங்கரவாதி நாதுராம் கோட்சே. கோட்சேவை கொண்டாடுகிறவர்கள் தேசவிரோதிகள். இவர்கள் மீது ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.