முக்கிய ஆலோசனை.. உத்தவ் தாக்கரேவுடன் லஞ்ச் சாப்பிட்ட சந்திரசேகரராவ்.. 2024க்கும் ரெடியாகும் பிளான்!
மும்பை: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பை ஏற்று அவருடன் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் லஞ்ச் சாப்பிட்டார். இந்த சந்திப்பின்போது 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். ‛‛இந்தியாவில் வரி ஏற்றிய முட்டாள்களே அதை குறைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை விரட்டியடிக்க தேசிய அரசியலிலும் ஈடுபடுவேன். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என கடும் வார்த்தைகளால் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் அவர் விமர்சித்தார்.
மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலாக பாகிஸ்தானில் நடத்தியதாக கூறப்படும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடும்படி கோரிக்கை வைத்தார்.

உத்தவ் தாக்கரே
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்ட்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் சந்திரசேகரராவிடம் பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்ததோடு, அரசியல் விஷயங்கள் குறித்து பேசி கொண்டனர். மேலும் பிப்ரவரி 20 மதிய உணவுக்கு(லஞ்ச்) மும்பைக்கு வரும்படி சந்திரசேகர ராவுக்கு, உத்தவ்தாக்கரே அழைப்பு விடுத்தார். இதற்கு சந்திரசேகரராவும் ஒப்புக்கொண்டார்.

மதிய உணவு
அதன்படி இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் மகளும், எம்எல்சியுமான கவிதா, எம்பிக்களான சந்தோஷ்குமார், ரஞ்சித் ரெட்டி, பிபிபட்டீல் ஆகியோருடன் சென்றிருந்தார்.மும்பையில் உத்தவ்தாக்கரேவை அவர் சந்தித்தார். பூங்கொத்து கொடுத்து சந்திரசேகரராவை, உத்தவ்தாக்கரே வரவேற்றார். இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அதன்பின் இருவரும் அரசியல் தொடர்பாக பேசியதோடு, சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ்
இதுதொடர்பாக வெளியான புகைப்படத்தில் உத்தவ்தாக்கரே, அவரது இளைய மகன் தேஜஸ், சந்திரசேகரராவ் ஆகியோர் உள்ளனர். மேலும் வீடியோ ஒன்றில் இவர்களுடன் பாஜகவை எதிர்த்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் ஆகியோரும் உள்ளனர். இதன்மூலம் பாஜகவை எதிர்க்கும் கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கூட்டணியை விரைவுப்படுத்தும்
இந்த சந்திப்பு குறித்து சிவசேனாவின் பத்திரிகை ஷாமனாவில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் உத்தவ்தாக்கரே, சந்திரசேகரராவ் இடையேயான சந்திப்பு தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அரசியல் கூட்டணிக்கான செயல்முறையை விரைவுப்படுத்தும் என குறிப்பிட்டு இருந்தது. சந்திரசேகர் ராவ் வருகையொட்டி மும்பையில் சில இடங்களில் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

சரத்பவாருடன் சந்திப்பு
அதன்பிறகு இருவரும் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து இன்று இரவு பெங்களூருவில் வைத்து ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவையும் சந்திரசேகரராவ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிற முதல்வர்களுடன் சந்திப்பு
சந்திரசேகரராவ் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதில் காங்கிரஸ் இன்றி பிற மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை துவங்கி உள்ளார். விரைவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவு
முன்னதாக உத்தவ்தாக்கரே, சந்திரசேகராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதிய உணவுக்கு அழைத்தபோது, ‛‛கூட்டாச்சி உணர்வை உயர்த்தும் வகையில் பிரித்தாளும் விசைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் உங்கள் குரலை கொடுத்துள்ளீர்கள். எப்போது சிவசேனா உங்களுக்கு ஆதரவாக இருக்கும்'' என சந்திரசேகரராவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications