தேர்தல் அறிவிப்புக்கு சில நிமிடங்கள் முன்பாக “தீபாவளி” போனஸ் அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, அதாவது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சற்று முன்பாக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசும் பல மாநில அரசுகளும், அரசு ஊழியர்கள் உட்பட, பல பிரிவு மக்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு பெண்களுக்கான 'லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் தீபாவளி போனஸை நேற்று அறிவித்தது. லட்கி பஹின் யோஜனா தீபாவளி போனஸ் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளில் அக்டோபர் மாதம் ரூ.1500 க்கு பதிலாக ரூ.3000 வரவு வைக்கப்படும். தகுதியுள்ள அனைத்துப் பெண்களும் நான்காவது மற்றும் ஐந்தாவது தவணைக்கான பணத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்ப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்டது மகாராஷ்டிரா மாநில அரசு.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.28,000 அறிவித்தார். எம்.பி ராம்தாஷ் அத்வாலே தலைமையிலான முனிசிபல் மஸ்தூர் சங்கம், ஊழியர்களுக்கு ரூ.40,000 தீபாவளி போனஸ் கோரிய நிலையில், 28,000 போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாநில மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். போனஸ் அறிவிப்பால் மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தீபாவளி போனஸாக, பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) ஊழியர்களுக்கு 26,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.
288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications