தொடர் வன்முறை! பொருளாதாரத்தில் இலங்கை, உக்ரைனை விட இந்தியா மோசமாகும்! சிவசேனா கடும் எச்சரிக்கை
மும்பை: ‛‛தலைநகர் டெல்லி உள்பட பெரிய நகரங்களில் தொடரும் வன்முறையால் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை மற்றும் உக்ரைனை விட மோசமாகும் சூழல் உருவாகலாம்'' என மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா உள்பட சில மாநிலங்களிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன. சில இடங்களில் வன்முறை வெடித்தன.
இந்த பிரச்சனை முடியும் முன்போ தலைநகர் டெல்லியிலும் வன்முறை ஏற்பட்டது. அதாவது டெல்லி ஜஹாங்கிர்பூரியில் சனிக்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்
டெல்லி நிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கண்காணித்து வருகிறார். மேலும் ஜாதி, மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி சஞ்சய் ராவத் கூறியதாவது:

தேர்தல் வெற்றிக்கு வன்முறை
‛‛நாட்டின் பெரிய நகரங்களில் சமீப காலமாக பதற்றமான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நம்நாட்டின் தலைநகரான டெல்லியில் வன்முறை நடந்துள்ளது. டெல்லி என்பது யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் அது மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடத்த நடைபெற உள்ளது. இதற்கு முன்பும் தேர்தலுக்கு தேதி குறிப்பிடப்பட்டது. அதன்பிறகு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வன்முறை நடக்கிறது. இது அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறவே நடப்பதாக நினைக்கிறேன்'' என மறைமுகமாக பாஜகவை குற்றம்சாட்டினார்.

மோசமான பொருளாதாரம்
மேலும் அவர் கூறுகையில், ‛‛ மும்பையில் பாஜகவுக்கு பலம் இல்லை. இதனால் தான் ஒலிபெருக்கி பிரச்சனை எழுப்பப்பட்டு வருகிறது. இதேபோல் பிற பெரு நகரங்களிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சனைகளால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை, உக்ரைனை விட மோசமாக மாறும்'' என எச்சரிக்கை விடுத்தார்.

சஞ்சய் ராவத் சொத்து முடக்கம்
சிவசேனா-பாஜக கட்சிகள் ஒருகாலத்தில் கூட்டணியில் இருந்தன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது சிவசேனா, பாஜகவுடனான கூட்டணியை முறித்ததோடு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் கூட்டணி கட்சியினர் மீது மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் நில மோசடி தொடர்பாக சஞ்சய் ராவத்தின் சொத்துகளும் சமீபத்தில் முடக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக சஞ்சய் ராவத் மத்திய அரசை விமர்சித்து வருவது குகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications