5 வருட சிறைக்கு பின்.. உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.என் சாய்பாபா விடுதலை
மும்பை: கடந்த 2017ம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
90% மாற்றுத்திறனாளியான இவர் மீது உபா (UAPA) உள்ளிட்ட சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கின் மீது கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதியன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த சாய்பாபாவை காவல்துறை கைது செய்தது. இவர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இவர் மட்டுமல்லாது இவருடன் சேர்ந்து 5 பேர் மீதும் இதே வழக்கு பதியப்பட்டது. இதில் பேராசிரியர் சாய்பாபா மாற்றுத்திறனாளியாவார். இவரால் எழுந்து நடக்க இயலாது, இரு கைகளில் ஒன்று செயலிழந்துள்ளது.

ஆயுள் தண்டனை
இந்நிலையில் வழக்கு குறித்து விசாரித்த விசாரணை நீதிமன்றம் அதே ஆண்டில் இவர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்தது.
இந்த காலம் முழுவதும் இவர்கள் நாக்பூர் மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை காலத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உபா சட்டம்
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து இன்று நீதிபதிகள் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாடு முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது வழக்கம்.

புள்ளி விவரம்
ஆனால் இவ்வாறு கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது கடந்த 2009லிருந்து நடப்பாண்டு ஆகஸ்ட் வரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 80% பேர் பாஜக ஆட்சியில்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2015 முதல் 2022 வரை இந்த UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 2.8% பேரின் குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளி விவரங்களை People's Union for Civil Liberties (PUCL) அமைப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications