என்னோடு வந்த எம்எல்ஏக்களில் ஒருவர், தேர்தலில் தோற்றாலும் அரசியலில் இருந்து விலகல்: ஏக்நாத் ஷிண்டே
மும்பை: அடுத்த தேர்தலில் தன்னுடன் வந்த எம்எல்ஏ-க்களில் ஒருவர் தோல்வியடைந்தாலும், தான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா அணி - பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மகா விகாஸ் அகாடி ஆட்சி கவிழ்ந்ததற்கு சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததும், சிவசேனா கட்சியில் நிலவிய வாரிசு அரசியலுமே காரணமாக பார்க்கப்படுகிறது.

கட்சியை கைப்பற்றி முயற்சி
சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டனர். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றனர். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே பிடியில் இருந்து சிவசேனா கட்சியும் பறிபோகும் அபாயம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனா கட்சி, சின்னத்தை பறிப்பதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

ஏக்நாத் ஷிண்டே பேச்சு
இந்த சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சத்தார் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார். அந்தப் பேரணியில் பேசிய அவர், மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு எதிராக அணி திரண்ட போது முதலில் என்னுடன் 30 எம்எல்ஏ-க்கள் உடனிருந்தனர். இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக 40ஆக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 10 பேர் அச்சமின்றி ஆதரவளித்தனர். தங்களுடன் வந்தனர். ஆனால் தொடக்கம் முதலே அவர்களின் பாதுகாப்பு குறித்து தான் அச்சத்திலேயே இருந்தேன்.

எம்எல்ஏ-க்கள் பற்றி ஏக்நாத்
அவர்களின் பல ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை என்னிடம் பணயம் வைத்தனர். ஹிந்துத்துவாவிற்காக அனைவரும் என்னுடன் கைகோர்த்தனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அரசியல் எதிரியாக கருதி செயல்பட்ட பால் தாக்கரே மற்றும் ஆனந்த் திகேவின் உண்மையான தொண்டர்கள். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக ஏராளமான சங்கடங்களை அனுபவித்தவர்கள்.

ஏக்நாத் சவால்
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா - பாஜக கூட்டணி இணைந்து 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறுவோம். என்னுடன் வந்த 50 எம்எல்ஏ-க்களில் ஒருவர் தோல்வியடைந்தாலும் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications