"இன்னும் ஆறே மாசம் தான்.. எழுதி வைச்சுங்கோங்க!" ஷிண்டே அரசு தப்பாது.. காரணத்தை உடைக்கும் சரத் பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே தலைமையில் புதிய அரசைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், இது தொடர்பாக சரத் பவார் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சுமார் 2.5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த வாரம் கவிழ்ந்தது. அங்கு பிரச்சினையைக் கிளப்பிய ஷிண்டே கச்சிதமாகக் காய்களை நகர்த்தினார்.
"பலி ஆடு!" மகாராஷ்டிராவில் பாஜக ஏன் முதல்வர் பதவி ஏற்கவில்லை தெரியுமா! உடைக்கும் யஷ்வந்த் சின்ஹா
இறுதியில் பாஜக உடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியை அமைத்துள்ளது. ஷிண்டே முதல்வராகவும் ஃபட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்றுள்ளார்.
மகாராஷ்டிரா
பலரும் ஃபட்னாவிஸ் தான் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பெரிய ட்விஸ்டாக அவர் முதல்வராகப் பதவி ஏற்கவில்லை. தாக்கரே ராஜினாமா செய்யும் போது, தனக்குப் பின்னால் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார் என்பதற்கு என்ன நிச்சியம் எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதில் அடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
அதேநேரம் மற்ற அரசியல் தலைவர்களும் பாஜகவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதை விளக்கி வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று மாலை மகாராஷ்டிரா என்சிபி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் சரத் பவார் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு குறித்து சரத் பவார் சில முக்கிய தகவல்களைக் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சரத் பவார்
அந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சரத் பவார் என்ன பேசினார் என்பது குறித்து அதில் கலந்து கொண்டு என்சிபி எம்எல்ஏ சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது அவர், "மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசும் அடுத்த ஆறு மாதங்களில் கவிழும் வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இடைத்தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். இப்போது உள்ள அரசு செட்அப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களில் பலருக்கும் உடன்பாடு இல்லை.
அரசு கவிழும்
அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்ட உடன், சலசலப்பு உருவாகும். அதை அவர்களால் நிர்வகிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். இதனால் புதிதாக உருவான அரசே கவிழும் சூழல் உருவாகும். இந்த சோதனை முயற்சி கண்டிப்பாகத் தோல்வி அடையும். இதனால் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பலரும் மீண்டும் தாக்கரே பக்கம் திரும்புவார்கள்.
6 மாதங்கள்
நம் கையில் வெறும் 6 மாதங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எனவே, என்சிபி உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் நாம் அனைத்திற்கும் தாயாராக இருக்க வேண்டும். அப்போது தான் நிலைமை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்றார்.
சின்ஹா
முன்னதாக சென்னையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவும் இதேபோல சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து இருந்தார். அதாவது இப்போது அமைந்துள்ள அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் இதன் காரணமாகவே ஷிண்டேவை முதல்வராக்க பாஜக ஒப்புக் கொண்டு உள்ளதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.