உச்சம்.. மகாராஷ்டிராவில் காங்., என்சிபி கூட்டணியில் இருந்து வெளியேற தயார்! சிவசேனா எம்பி பரபர தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில்‛‛அதிருப்தி எம்எல்ஏக்களுக்காக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உடனான கூட்டணியை விட்டு வெளியேற சிவசேனா தயாராக இருக்கிறது'' என அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணிக்கு மகா விகாஷ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது!
105 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது. இதையடுத்து அவ்வப்போது பாஜக-சிவசேனா இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. சமீபகாலமாக இது அதிகரித்தது.
ஏக்நாத் ஷிண்டேவுடன் எம்எல்ஏக்கள்
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணியில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மேலும் சுயேச்சைகளும் அவருடன் கைகோர்த்து உள்ளனர். மொத்தம் 46 எம்எல்ஏக்கள் வரை ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசு கவிழும் நிலையில் உள்ளது.
அதிருப்தி ஏன்?
இந்த அதிருப்தி எம்எல்ஏக்களின் பிரதான கோரிக்கை என்பது, சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் உள்ள கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும் என்பது தான். கொள்கை, சித்தாந்த ரீதியாக இந்த கட்சிகள் இடையே வெவ்வேறு பார்வை உள்ளதால் இணைந்து செயல்பட முடியவில்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர்.
கூட்டணியில் இருந்து வெளியேற தயார்
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை முறித்து கொள்ள தயாராக இருப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதுபற்றி சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் கூறியதாவது: மகாவிகாஷ் அகாடி கூட்டணியில்(சிவசேனா+ தேசியவாத காங்கிரஸ்+ காங்கிரஸ்) இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் அதுபற்றி அவர்கள் மும்பை வந்து உத்தவ் தாக்கரேவை சந்தித்து அவர்கள் கூற வேண்டும். நிச்சயமாக அதனை பற்றி யோசிப்போம். ஆனால் கவுஹாத்தியில் இருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம்.
உண்மையான சீடர்கள் யார்?
கவுஹாத்தியில் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏக்களில் 20 பேர் தொடர்பில் உள்ளனர். அமலாக்க பிரிவினரின் விசாரணைக்கு பயந்து கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் பால்தாக்கரேவின் உண்மையான சீடர்கள் இல்லை. தற்போதைய சிவசேனா எ்னபது உத்தவ் தாக்கரேவின் கீழ் பால் தாக்கரேவின் பணியை செய்து வருகிறது. பால்தாக்கரேவை ஆதரிக்கிறேன், பின்பற்றுகிறேன் என வெறும் வாயில் கூறுவது அவரது சீடர் என்பதை நிரூபிக்காது.
கட்சி வலுவாகவே உள்ளது
நான் எந்த முகாம் பற்றியும் பேசமாட்டேன். என் கட்சியைப் பற்றி பேசுவேன். இன்று வரை சிவசேனா கட்சி வலுவாகவே உள்ளது. எங்களுடன் 20 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றிய விபரம் மும்பைக்கு வந்ததும் தெரியும். இந்த எம்எல்ஏக்கள் எத்தகைய சூழலில் எங்களை விட்டுச்சென்றார்கள் என்பது விரைவில் தெரியவரும்'' என்றார்.