மகாராஷ்டிராவில் மீண்டும் முழு லாக்டவுன்.. மிக மோசமான நிலையில் கொரோனா பரவல்.. உத்தவ் தாக்கரே சூசகம்
மும்பை: கொரோனா பாதிப்பு மாநிலத்தில் மிக மோசமாக உள்ளதால் மகாராஷ்டிரா முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இதனால் மகாராஷ்டிரா அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் மாநிலத்தில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.
அனைத்து கட்சி கூட்டம்
கொரோனா பரவல் மாநிலத்தில் மிகவும் மோசமாக உள்ளதால், நிலைமை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடுகள் தேவை
vஇந்தக் கூட்டத்தில் பேசிய மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த, கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்த அவர், இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே சூசகம்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் உத்தவ் தாக்கரே தனது ட்விட்டரில், "இன்று லாக்டவுன் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும்கூட, நாளை லாக்டவுன் போன்ற ஒரு சூழ்நிலை வேறு வழியின்றி அமலுக்கு வரும் சூழ்நிலை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், போரில் வெற்றி பெற நாம் சில கஷ்டங்களை தாங்க வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார். அதாவது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக கூறுவது என்ன
இருப்பினும், மீண்டும் லாக்டவுன் என்ற முடிவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தாக தெரியவில்லை. இது குறித்து முன்னாள் பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், தொழிற்சாலைகள் முடங்கும் சூழ்நிலை ஏற்படும். மக்கள் கடும் கோபமடைவார்கள். எனவே, அரசு இது குறித்து தீவிர ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி
அதேபோல கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏகளும்கூட மீண்டும் லாக்டவுன் என்ற முடிவை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தினசரி உயிரிழப்பும் அங்கு 300ஐ கடந்துள்ளது.
சுகாதார துறை அமைச்சர்
மராட்டியத்தில் தற்போதுள்ள நிலைமை குறித்து ராஜேஷ் தோபே கூறுகையில், நாம் மற்றுமொரு லாக்டவுனை நோக்கிச் செல்கிறோம், ஆனாலும்கூட நாம் அந்த நிலைக்குச் செல்ல தேவையிருக்காது என நம்புகிறேன். அதற்குள் நாம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்திவிட்டால் மகிழ்ச்சிதான். சிறப்பான முடிவை எதிர்பார்த்தே நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.