"எனக்கு துரோகம் செய்தது போல.. அவர்களுக்கு செய்துவிடாதீர்கள்" ராஜினாமாவுக்கு பின் மனம் திறந்த தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜினாமா செய்த பின்னர் முதல்முறையாகச் செய்தியாளர்களிடம் பேசினார்.
மகாராஷ்டிராவில் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீட்டித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. பாஜக- சிவசேனா கூட்டணியில் இப்போது புதிய அரசு அமைந்துள்ளது.
நாங்க இந்துக்கள் அல்ல.. எங்கள் மதம் சர்னா! திரௌபதி முர்மு சார்ந்த.. 5 மாநில பழங்குடியினர் போராட்டம்!
தான் ராஜினாமா செய்தால் மற்றொரு சிவசேனா தொண்டர் முதல்வராகப் பதவி ஏற்பார் என்பதற்கு என்ன சாத்தியம் என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி இருந்தார்.
ஷிண்டே
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். இரண்டு முறை முதல்வராக இருந்த பாஜகவின் பட்னாவிஸ் துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. ராஜினாமா செய்த பின்னர் உத்தவ் தாக்கரே எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் இந்தச் சூழலில் சிவசேனா பவனில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார்
உத்தவ் தாக்கரே
2019 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதல்வர் பதவியை அளிப்பதாகக் கூறிவிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்வர் பதவியை அளிக்க மறுத்தது குறித்து உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.மேலும், தன்னை முதுகில் குத்தியதை போல மும்பைக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் உத்தவ் தாக்கரே பாஜகவிடம் கேட்டுக் கொண்டார். மேலும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
முன்பே செய்திருக்கலாம்
அவர் மேலும் பேசுகையில், "அரசு இப்போது எப்படி அமைந்தது எனப் பாருங்கள். சிவசேனாவை சேர்ந்த ஒருவரை ஒருவரை முதல்வராக்கி உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இதைத் தான் நான் அப்போதே அமித் ஷாவிடம் கூறியிருந்தேன். ஆட்சி அமைக்கும் போது சிவசேனாவை சேர்ந்த ஒருவர் 2.5 ஆண்டுகள் முதல்வராக இருக்க வேண்டும் என்றேன். இதை அவர்கள் அப்போதே மரியாதையுடன் செய்திருக்கலாம்.
ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல்
அப்போது சிவசேனா அதிகாரப்பூர்வமாக பாஜக உடன் தான் கூட்டணியில் இருந்தது. இதை அவர்கள் முன்பே செய்திருந்தால், மகா விகாஸ் கூட்டணியே உருவாகி இருக்காது. இப்போது எம்எல்ஏக்கள் என்ன செய்தார்கள், எப்படி ஆட்சி அமைத்தார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். இது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் நிகழ்வாகும். மக்களின் வாக்குகளை அவர்கள் மதிக்கவில்லை" என்றார்.
துரோகம்
மேலும், மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க்கிலிருந்து ஆரே காலனிக்கு மெட்ரோ கார் பார்கிங்கை மாற்றும் புதிய மகாராஷ்டிர அரசின் நடவடிக்கையால் வருத்தமடைவதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "என் மீது இருக்கும் கோபத்தை மும்பை வாசிகள் மீது காட்டாதீர்கள். எனக்குத் துரோகம் செய்தது போல மும்பை வாசிகளுக்கும் துரோகம் செய்யாதீர்கள்.
வேண்டாம்
மெட்ரோ பார்கிங் திட்டத்தை மாற்ற வேண்டாம். மும்பை சுற்றுச்சூழலுடன் விளையாட வேண்டாம். மெட்ரோ கார் பார்கிங் திட்டம் காஞ்சூர்மார்க்கில் இருக்கட்டும், ஆரேயில் வேண்டாம். கஞ்சூர்மார்க் தனியார் ப்ளாட் அல்ல. ஆரேயை ரிசர்வ் வனமாக அறிவித்துள்ளோம். அங்கு ஏகப்பட்ட வனவிலங்குகள் உள்ளன. அதை நாம் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
ஆரே வனப்பகுதி
மும்பயைில் ஆரே பகுதி மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும். இங்குப் பல வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மரங்களை அழித்துவிட்டு, மெட்ரோ பார்கிங் ஏற்படுத்தும் திட்டம் 2019இல் முன்மொழியப்பட்டது. அப்போதே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா ஆட்சி அமைந்ததும், ஆரேவுக்கு பதில் காஞ்சூர்மார்க்கில் பார்கிங்க வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.