கலங்கும் கண்கள்.. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரரால் சுட்டு கொல்லப்பட்ட 3 பயணிகள்! பின்னணியில் உருக்கம்
மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே போலீஸ் அதிகாரி உள்பட 4 பேரை ரயில்வே போலீஸ்கார் சேத்தன் சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நிலையில் அதில் இறந்த 3 இஸ்லாமிய பயணிகள் யார்? அவர்களின் குடும்ப பின்னணி என்ன? என்பது குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு ஜெய்ப்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ரயில்வே போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதில் ஒரு ரயில்வே போலீஸ்காரர் தான் சேத்தன் சிங் (வயது 33). இந்நிலையில் தான் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்ட சேத்தன் சிங் தனது உயரதிகாரி, 3 பயணிகள் என மொத்தம் 4 பேரை சுட்டுக்கொன்றார்.
அதாவது சேத்தன் சிங் துப்பாக்கியால் சுட்டதில் ரயில்வே உதவி சப் இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா, பயணிகளான அஜ்கர் அப்பாஸ் ஷேக் (48), அப்துல் காதர்பாய் முகமது (62), சையத் சாய்புல்லா ஆகியோர் இறந்தனர். இஸ்லாமியர்களை சேத்தன் சிங் ஓடும் ரயிலில் சுட்டு கொன்றது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. இந்த சம்பவத்துக்கு மதசாயம் பூசப்பட்டன.
தற்போது சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க சேத்தன் சிங் சுட்டுக்கொன்ற 3 பயணிகள் யார்? அவர்களின் குடும்ப பின்னணி என்ன? என்பது பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

அஜ்கர் அப்பாஸ் ஷேக்: இவர் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஜெய்ப்பூரில் தங்கி வளையல் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெய்ப்பூரில் கடந்த 3 ஆண்டு அங்கு பணியாற்றிய அஜ்கருக்கு சம்பளம் என்பது போதுமானதாக இல்லை. இதனால் அவர் வேறு வேலை தேட முடிவு செய்தார். இதையடுத்து மும்பைக்கு செல்ல அவர் திட்டமிட்டார்.
அதன்படி அவர் ரயிலில் வேலை தேடி ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டார். அஜ்கர் இதுவரை மும்பைக்கு சென்றது இல்லை. முதல் முறையாக அவர் வேலை தேடி மும்பைக்கு புறப்பட்டார். ஆனால் மும்பையில் அவர் கால் வைக்கும் முன்பே ரயில்வே போலீஸ்காரர் சேத்தன் சிங்கால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது சோகமான விஷயமாகும். இந்நிலையில் தான் அஜ்கர் அப்பாஸின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்துல் காதர்பாய் முகமது: இவர் மகாராஷ்டிரா மாநிலம் நல்ல சோபரா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்தார். மனைவி, 2 மகன்கள், மருமகள், பேரனுடன் அப்துல் காதர்பாய் முகமது வாழ்க்கை நடத்தினார். சமீபத்தில் இவரது குடும்பம் துபாய்க்கு சென்றது. இவரும் துபாய் புறப்பட்டார். ஆனால் ஆவண சரிபார்ப்பின்போது சில சிக்கல்கள் எழுந்தன. இதனால் குடும்பத்தினர் துபாய் சென்ற நிலையில் அப்துல் காதர்பாய் முகமது இங்கேயே இருந்தார்.
ஆவணங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு விரைவில் துபாய் செல்ல அவர் முடிவு செய்தார். இதற்கிடையே தான் மொஹரம் பண்டிகை வந்தது. இந்த பண்டிகையையொட்டி அப்துல் காதர்பாய் முகமது தனது சொந்த ஊரான பனுபூருக்கு சென்றார். மொஹரத்தை முடித்துவிட்டு அவர் மும்பை திரும்பிய நிலையில் சேத்தன் சிங்கால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சையத் சாய்புல்லா: அதாவது சேத்தன் சிங் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தவரில் சையத் சாய்புல்லா மும்பை வழியாக ஹைதராபாத் செல்ல அன்றைய தினம் ரயிலில் பயணித்தார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர் கடைசி மகள் பிறந்து வெறும் 6 மாதங்கள் மட்டும ஆகிறது. இவிர் ஹைதராபாத்தின் நாம்பள்ளி பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் தான் பணியாற்றும் செல்போன் கடை உரிமையாளருடன் அஜ்மீர் சென்று அஜ்மீர் ெஷரீப் தர்காவை பார்த்துவிட்டு ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். இத்தகைய சூழலில் தான் அவர் சேத்தன் சிங்கால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது ரயிலில் கடைசியாக 4வது நபராக இவரை சேத்தன் சிங் சுட்டு கொன்றார் என்பது சோகமான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications