மகாராஷ்டிரா முதல்வர் நாற்காலி.. 2019ல் விட்டு கொடுக்க மறுத்த பாஜக.. இப்போது ‛ஓகே’ சொன்னது ஏன்?
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு நடுவே அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. சிவசேனா அதிருப்தி அணியின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் 100க்கும் அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது ஏன்? என்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
மகாராஷ்டிராவில் நகமும், சதையுமாக இருந்தது தான் பாஜக, சிவசேனா. இந்த 2 கட்சிகளும் காவிக்கொடி, இந்துத்துவா கொள்கையை கொண்டது.
120 எம்எல்ஏக்கள் இருந்தும்.. பால்தாக்ரே தொண்டன் என்னை முதல்வராக்கியது பாஜக.. நெகிழும் ஏக்நாத் ஷிண்டே
ஏறக்குறைய கடந்த 30 ஆண்டுகளாக மகாராஷ்டிரா தேர்தல் என்றவுடன் மனதுக்கு வருவது என்பது பாஜக, சிவசேனா கூட்டணி தான். இந்த இரு கட்சிகளும் 1989 முதல் கூட்டணி அமைத்து உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா 1989ல் இணைந்தது.
1989 முதல் கூட்டணி
இதையடுத்து மக்களவை தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டன. இந்த 2 கட்சிகளும் முதல் முதலாக 1995 தேர்தலில் கூட்டணியாக இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தன. பால்தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவராக இருந்தாலும் கூட அவர் முதல்வர் பதவி உள்பட அரசியல் பதவிகளில் நாட்டமின்றி இருந்தார். இதனால் கட்சியில் உள்ளவர்கள், பாஜக தலைவர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் இருந்து வந்தனர். 2012ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார். இருப்பினும் கட்சியின் கூட்டணி ஆட்சி துவங்கியது. 2014 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது. அதேபோல் மாநிலத்திலும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார்.
2019 தேர்தலிலும் கூட்டணி
மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாஜக 105 இடங்களில் வென்ற நிலையில் சிவசேனா 55 இடங்களில் வாகை சூடியது. மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சிஅமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் சிவசேனா தரப்பில் இருந்து கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.
கூட்டணி முறிவு ஏன்?
அதாவது மகாராஷ்டிரா அமைச்சரவையில் 50:50 பார்முலாவை பின்பற்ற வேண்டும். அமைச்சரவையில் பாஜக, சிவசேனாவுக்கு சரிபாதியாக துறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஐந்தாண்டு முதல்வர் பதவியையும் இரண்டரை ஆண்டுகளாக பிரித்து கொள்ள வேண்டும் என சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டது.
மகாவிகாஷ் கூட்டணி
மேலும், சட்டசபை தேர்தலில் 54 இடத்தில் வென்ற தேசிய வாத காங்கிரஸ், 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க உடன்பட்டன. அதோடு முதல்வர் பதவியையும் சிவசேனாவுக்கு வழங்க இருகட்சிகளும் ஒப்புக்கொண்டன. இதையடுத்து உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் மகாவிகாஷ் அகாடி எனும் பெயரில் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார். மேலும் அவர் எம்எல்சியாகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இரண்டரை ஆண்டு ஆட்சிக்கு முடிவு
இந்நிலையில் தான் இரண்டரை ஆண்டு முடிந்த நிலையில் சிவசேனாவின் 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத காரணத்தினால் நேற்று உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்வராக ஏக்நாத் ஷிண்டே
இந்நிலையில் தான் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க முடிவு செய்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் 2019ல் சிவசேனா கட்சிக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்த பாஜக தற்போது அதனை வழங்கி உள்ளது. இதனை அன்றே செய்திருந்தால் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு முடிவுரை எழுதப்பட்டு இருக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உள்குத்து உள்ளதா?
மேலும் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருப்பினும் 40 அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்கியதன் பின்னணியிலும் உள்குத்து உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஏக்நாத் ஷிண்டேவின் அணியில் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு ஏற்கனவே தகுதநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 11 வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மீண்டும் ஜூலை வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் கட்சியின் நடவடிக்கை மற்றும் சிவசேனா கொறடா உத்தரவை மீறியதாக கூறி 16 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்ய சிவசேனா தரப்பில் வாதிடப்படும்.
சுதாரித்ததாக பாஜக?
ஒருவேளை எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் ஆட்சிக்கும், முதல்வர் பதவிக்கும் சிக்கல் ஏற்படும். இதனை மனதில் வைத்து தான் பாஜக சார்பில் முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானால் அவரும் பதவியை இழக்க நேரிடும். ஏற்கனவே 2019ல் சில நாட்கள் மட்டுமே தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்து பதவி விலகிய நிலையில் தற்போது சுதாரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சிவசேனா எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பா?
அதேநேரத்தில் தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருக்கும்பட்சத்தில் ஜூலை 11 வழக்கு விசாரணையின்போது தாங்கள் தொடர்ந்து சிவசேன கட்சியில் தான் உள்ளோம். 40 சிவசேனா எம்எல்ஏக்கள் எங்களிடம் தான் உள்ளனர். நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யலாம். அதோடு சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு தான் நான் முதல்வராக பதவி ஏற்றேன். நம்பிக்கை வாக்கெடுப்பும் நடக்கவில்லை. இதனால் கட்சி மாறி கூட்டணிக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் வாதம் வைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தகுதி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் அதில் இருந்து தப்பிப்பார்கள்.
ஆட்சி நீடிக்குமா?
இதனை மனதில் வைத்தே இத்தகைய நகர்வை பாஜக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவு, உத்தவ் தாக்கரேவின் அடுத்தக்கட்ட நகர்வு ஆகியவற்றை பொறுத்து தான் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியின் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது. ஒருவேளை நீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்பட்சத்தில் சிறிது காலத்துக்கு பிறகு பாஜக முதல்வர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.