சார் வேட்பாளர் கண்ணாடியை மறந்து வந்துட்டாரு! உறுதிமொழியை நான் படிக்கவா.. நாகை ஆட்சியரகத்தில் கலகல
நாகை: சார் வேட்பாளர் கண்ணாடியை மறந்து வச்சிட்டு வந்துட்டாரு, அவருக்கு பதில் உறுதிமொழியை நான் படிக்கவா என உடன் வந்தவர் கேட்க நாகை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழதத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் இன்று ஆகும்.

இந்த நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சையால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார்.
அவர் நாகை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இவருடன் மேலும் ஒருவர் வந்தார். உடனே ஆட்சியர் ஜானி டாம், "நீங்கள் வெளியே இருங்கள், அவர் உறுதிமொழி படித்துவிட்டு வருவார்" என்றார்.
அதற்கு அந்த நபர், "சார் ப்ளீஸ், வேட்பாளர் தனது மூக்குக் கண்ணாடியை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாரு, அவருக்கு பதில் உறுதிமொழியை நான் படிக்கவா" என்றார். உடனே ஜானி டாம், அதிர்ச்சி அடைந்து "இல்லை இல்லை நான் படிக்கிறேன், வேட்பாளர் திருப்பி சொல்லட்டும்" என கூறிவிட்டு வாசிக்கத் தொடங்கினார். அதை சுப்பிரமணியன் வாசித்தார்.
திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங்கில் மாஸ்டர் பட்டம் படித்துள்ளார். இவர் நேற்றைய தினம் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தமிழில் உறுதிமொழி வாசிக்க திக்கி திணறினார். உடனே அதிகாரியே வாசிக்க அதை சந்தர் திருப்பி வாசித்தார்.
அதே போல் விருதுநகர் மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக், உறுதிமொழியை தமிழில் படிக்கத் தெரியாததால் அங்கிருந்த தேர்தல் அலுவலர் ஜெயசீலன் படிக்க அப்படியே கவுசிக் திருப்பி சொன்னார். கவுசிக்கிற்கு தமிழில் பேச தெரியும். ஆனால் அவருக்கு படிக்க தெரியாது. அவர் ஓமன் நாட்டில் படித்தாராம். தமிழ் தமிழ் என சீமான் பேசிக் கொண்டிருக்கையில் அவருடைய வேட்பாளர்கள் சிலருக்கு தமிழே படிக்கத் தெரியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications