ஊருக்குள் சாராய விற்பனை.. ஓட ஓட விரட்டி வெளுத்தெடுத்த மக்கள்..தலைதெறித்து ஓடிய கும்பல்..வைரல் வீடியோ
நாகை: நாகையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து சாராயம் விற்ற கும்பலை பொதுமக்கள் ஓட, ஓட விரட்டியடித்தனர். தமிழகத்தில் ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் சுமார் ஒன்றரை மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடந்தன. இதனால் மதுபிரியர்களை குறி வைத்து கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறந்தது.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
ஆங்காங்கே நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை போலீசார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினாலும் சிலர் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையை செய்து வருகின்றனர். இதேபோல் நாகை மாவட்டத்தின் சில இடங்களில் சில கும்பல் கள்ளச்சாராய விற்பனையை சுதந்திரமாக செய்து வருகின்றன.
சாராய பாக்கெட்டுகள்
மேலும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நாகைக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு இருந்து எளிதாக புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்வது வழக்கமாகி விட்டது.
போலீசார் நடவடிக்கை இல்லை
சாராய விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் பகுதி பெண்கள் இரு தினங்களுக்கு முன் நாகை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக எஸ்.பி அருண்தம்புராஜ் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட உத்தரவிட்டார். ஆனால் போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆவேசமடைந்த மக்கள்
இந்த நிலையில் ஆவேசமடைந்த மூங்கில்குடி கிராம பெண்கள், அந்த பகுதி மயானம் அருகே சாராய விற்பனை செய்த கும்பல் இருந்த இடம் நோக்கி விரைந்து சென்றனர். திடீரென பொதுமக்கள் ஆவேசமாக வருவதை பார்த்ததும் சாராய கும்பல் சாராய பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்.
தலைதெறிக்க ஓடும் காட்சிகள்
ஆனாலும் கிராம பெண்கள் சாராய கும்பலை ஓட, ஓட விரட்டியடித்தனர். மேலும், சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் வீசி எறிந்து அதனை உடைத்தனர். சாராயம் விற்ற கும்பலை பெண்கள் விரட்டியடித்து சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்து ஆவேசமாக உடைக்கும் காட்சிகள், சாராய கும்பல் தலைதெறிக்க ஓடும் காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.