அதிர்ச்சி தரும் ஆசாரிப்பள்ளம்.. அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்.. கவலையில் மக்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இறப்பு விகிதம் அதிகரிப்பு என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவும், மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடைபெறும் இது போன்ற இறப்பு சம்பவங்கள் அரசு மருத்துவமனையின் மீதுள்ள மக்களின் நம்பிக்கை இழக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி தனி விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
சமீப காலமாக இந்த மருத்துவமனையில் இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருவது மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சமூக ஆர்வலர்கள் பெற்ற அறிவிக்கை அதனை உறுதி செய்யும் படியாக அமைந்தது.
மருத்துவர்கள் அலட்சியம்
சமீப காலமாக அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் மருத்துவர்கள் இல்லாமல் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்யும் தவறான சிகிச்சை காரணமாக கர்ப்பிணிகள் உட்பட பல நோயாளிகள் இறப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
35 வயதுக்குக் கீழ் மரணம்
கடந்த ஆண்டு மட்டும் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதிக அளவில் இறந்துள்ளதாக கூறபடுகிறது. இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தவறான தகவல்களை அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
2017ல் 100 பேர் மரணம்
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் மாதம் சராசரியாக 100 நோயாளிகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் குடும்பகட்டுபாடு செய்த ஆஷா,29 என்ற இளம்பெண் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்துள்ளதாக தெரிகிறது.
துரித நடவடிக்கை தேவை
இது போன்ற விசயங்களால் அரசு மருத்துவமனையின் மீது உள்ள மக்களின் நம்பிக்கை குறைந்து உள்ளது. வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையை தேடினாலும் ஏழையும் பாமரனும் கோவிலாக நினைக்கும் அரசு மருத்துவமனை மீது மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி தனி விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.