பொறுமையான மனுசனே பொங்கி எழுந்துட்டாரே! அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி! கடுகடுத்த கம்யூ. எம்.பி.செல்வராஜ்
நாகை: எப்போதுமே பார்ப்பதற்கு பொறுமையானவராக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ், அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ரவி பற்றி பேசும் போது மட்டும் பொங்கி எழுந்திருக்கிறார்.
அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி என்றும் தேசிய கல்விக் கொள்கை பற்றி ஆளுநர் தமிழக மக்களுக்கு பாடம் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஆவேசம் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் 6 பேர் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வு
இது தொடர்பான விவரம் வருமாறு;
கருணாநிதி பிறந்தநாள்
மறைந்த கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பெரியளவில் கொண்டாடப்பட்டது. கூட்டணிக் கட்சி எம்.பி. என்ற முறையில் நாகை நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்வராஜ் அதில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மேடையில் கேட்டதன் விளைவாக ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உடனடியாக கிடைத்ததாக கூறினார்.
இடைநிற்றல்
மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது, ''மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை தமிழக மானவர்கள் மட்டுமின்றி பொதுவாகவே கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் எதிரானது. புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், தொடர்ந்து மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படும். மாணவர்கள் கல்வியை தொடர முடியாத ஒரு சூழல் ஏற்படும்.''
கத்துக்குட்டி
''தேசிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் சரியாக படிக்கவில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சென்னையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழக மக்களின் நலனையும், உரிமைகளையும் மிக கண்ணியத்துடன் எடுத்துக்கூறிய தமிழக முதல்வரை பாஜக தலைவர் அண்ணாமலை கத்துக்குட்டி தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.'
நிறுத்திக் கொள்க
''தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 14 ஆயிரத்து 164 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டதால் தான், 9 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதுபோன்று தமிழக மக்களுக்கு எதிரான கருத்துக்களை அண்ணாமலையும், பாஜகவினரும் நிறுத்தி கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.