''வீடு கட்டி வாடகைக்கு விட்டுருக்கேன்''.. ஆட்டோலதான் வருவேன்''.. போலீசாரை உறைய வைத்த பிச்சைக்காரர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் தங்கி இருந்த பிச்சைக்காரர்களை போலீசார் மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தங்க வைத்தனர்.
தமிழகத்தில் கொடிய வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 வாரங்களாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.
அத்தியாவசிய கடைகள் கூட அடைக்கப்பட்டு இருந்தன. ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பார்சல்கள் வழங்கப்பட்டன.

ஆதரவற்றவர்களுக்கு உணவு
தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் ஒரு வேளை உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தனர். தன்னார்வலர்கள் போலீசாரிடம் அனுமதி வாங்கி பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு கொடுத்து உதவி புரிந்தனர். போலீசாரும் பல பகுதிகளில் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்களுக்கு உதவி புரிந்ததை பார்க்க முடிந்தது.

மீட்ட போலீசார்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி பகுதியில் இதுபோல் சாலையோரங்களில் வசிப்பவர்களை மாநகராட்சிஅதிகாரிகளும், போலீசாரும் மீட்டு அவர்களை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் தங்கி இருந்த பிச்சைக்காரர்களை போலீசார் மீட்டனர்.

தூக்கிவாரி போட்ட பதில்
அவர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதில் ஒரு பிச்சைக்காரரிடம் உங்களுக்கு எந்த ஊரு? என்று போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர் அளித்த பதில் போலீசாரை தூக்கி வாரி போட்டது. அந்த நபர் '' சார் எனக்கு கருங்கல் தான். அங்கே தான் தங்கி இருக்கிறேன். தினமும் ஆட்டோவில் வந்து வந்து பிச்சை எடுத்து செல்வேன்.

புலம்பிய போலீசார்
கருங்கலில் ஒரு புது வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறேன்' என்று கூலாக பதில் அளித்தார் அவர். இதனை தொடர்ந்து அங்கு இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தங்க வைத்தனர். ''நாம இத்தனை வருஷம் சர்வீசில் இருந்தும் இன்னும் ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியவில்லை. இங்க பாருயா வீடு கட்டி வாடகைக்கு விட்டுருக்காங்க'' என்று சில போலீசார் புலம்பியபடி சென்றனர்.












Click it and Unblock the Notifications