அதிகார போதை முதல்வர் கண்ணை மறைக்குது! எம்பி தேர்தல்ல பாருங்க.. என்ன நடக்குதுனு! தடதடத்த மாஜி தங்கமணி
நாமக்கல் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகார போதையில் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் உள்ள திமுக ஆட்சியின் மீதான அவப்பெயர் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியவில்லை எனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அதிமுக நகர சார்பில் திமுக அரசின் சொத்து வரி,மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அவர், தமிழகத்தில் தினந்தோறும் 10 கொலைகள் நடப்பதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளது ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளதாக கூறினார்.
கர்நாடகா தேர்தல்.. ஜரூராக பாஜக.. 20,000 டாக்டர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு!
தங்கமணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பொதுமக்களுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்துவதற்காகவே திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலே 19 மாதங்களில் கெட்ட பெயர் வாங்கிய ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். மகளிருக்கான இலவச பேருந்து தற்போது முறையாக செயல்படவில்லை. அமைச்சர்களின் நாகரிகமற்ற பேச்சையும் சுட்டி காட்டினார்.
மின் இணைப்புடன் ஆதார்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி," மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் செயலில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கங்கள் மின்வாரியத் துறை சார்பில் இதுவரை அளிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
அதிமுக ஆட்சி
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தடையில்லா மின்சாரத்தை வழங்கினோம். மின்வாரியத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச நூறு யூனிட் மின்சாரம் உள்ளிட்ட இலவசத்தை தடை செய்வதற்காக திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. சொத்து வரி மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு திமுகவிற்கு மக்கள் நாடாளுமன்றத்தில் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
மக்களும் கோபம்
மதுவிலக்கு துறையில் மது விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்வதை கைவிட்டுவிட்டு அம்பு எய்தவர் யார் என நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகார போதையில் இருப்பதால், மக்கள் மத்தியில் அரசு குறித்து இருக்கும் அவப்பெயர்களை காவல்துறையினர் சரியாக தெரிவிப்பதில்லை மக்களும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதும் முதல்வருக்கு தெரியவில்லை. இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது நிச்சயமாக பதில் கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியின் மீது இருக்கும் அவ பெயர் குறித்து திமுக உணரும்" என தெரிவித்தார்.