எப்படி வந்து சிக்கியிருக்கோம் பார்த்தியா? மின் கோபுரத்தில் மோதிய விமானம்! திக்திக் சம்பவம்.. பின்னணி
நியூயார்க்: அமெரிக்காவின் கெய்தர்ஸ்பர்க்கில் இரண்டு பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று மின் கோபுரத்தில் மோதியதில், அப்பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் மின் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற மங்களூர் தீவிரவாதி.. நாசவேலைக்கு சதியா? என்ஐஏ 'திடுக்' தகவல்
விபத்து
அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து நேற்று பிற்பகல் Mooney M20J எனும் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் 2 பேருடன் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5.40 மணியளவில் கெய்தர்ஸ்பர்க்கில் உள்ள மாண்ட்கோமெரி கவுண்டி ஏர்பார்க் அருகில் இருந்த மின் கோபுரத்தில் எதிர்பாராத விதமாக இந்த விமானம் மோதியுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மணிக்கு அங்கு தீயணைப்பு துறையினர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் வரும் வரை விமானத்தில் இருந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர்.
Mooney M20J
இதனையடுத்து தீயணைப்பு படையினர் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் விமானம் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மேரிலாண்ட் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பொதுவாக குறைந்த அளவில் பயணிகள் பயணிக்க Mooney M20J வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் சாலைகளில் வாகனங்கள் விபத்திற்குள்ளாவதை போல அமெரிக்காவில் இப்படி சிறிய ரக விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவதுண்டு. Mooney M20J ரக விமானத்தில் அதிகபட்சமாக நான்கு பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும். இது மணிக்கு 323 கி.மீ வேகத்தில் செல்லும். அதேபோல அதிகபட்சமாக 1300 கி.மீ வரை இந்த விமானம் பறக்கும்.
மின் விநியோகம்
இந்நிலையில் நேற்றிரவு நடந்த இந்த விபத்து காரணமாக 80,000 ஆயிரம் வீடுகளுக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல போக்குவரத்து சிக்னல்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) சார்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரணம்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 939 சிறிய ரக விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில் 268 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 2019ல் 307 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெரும்பாலான விபத்துக்கள் ஓடுபாதையில் இருந்து விலகுவதாலும், அவசர அவசரமாக தரையிறக்கப்படுவதாலும் ஏற்படுகிறது. ஆனால் இதில் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை. மாறாக கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் விமானங்களே அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கிறது என அந்நாட்டு விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிய வருகிறது.