சென்னை டூ பெங்களூரு அரைமணி நேரம் தான்! உலகத்தை ஆச்சர்யப்பட வைத்த ஹைபர்லூப்.. மனிதர்கள் பயணம் சக்சஸ்
நியூயார்க்: விர்ஜின் ஹைபர்லூப் என்ற புதிய அதிவேக போக்குவரத்து முறையில் 2 பேர் வெற்றிகரமாக பயணித்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெவாடாவின் லாஸ் வேகாஸுக்கு வெளியே பாலைவனத்தில் டெவ்லூப் சோதனை பாதையில் நடந்தது. Hyperloop என்ற இந்த தொழில்நுட்பம் காந்தச் சக்தியில் செயல்படும் புதிய போக்குவரத்து அமைப்பு ஆகும்.
இந்த சோதனை பயணத்தில் விர்ஜின் ஹைப்பர்லூப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் இணை நிறுவனருமான ஜோஷ் கீகல் மற்றும் பயணிகள் அனுபவத்தின் தலைவரான சாரா லூச்சியன் ஆகியோர் முதல் முறையாக பயணித்த பயணிகள் ஆவர்.
பயணித்தவர்கள் யார் யார்
பெகாசஸ் என அழைக்கப்படும் விர்ஜின் ஹைபர்லூப் நிறுவனத்தின் வெள்ளை மற்றும் சிவப்பு ஹைப்பர்லூப் பாடில் தங்கள் இருக்கைகளுக்குள் ஜோஷ் கீகல், சாரா லூச்சியன் ஆகிய இருவரும் ஏறி அமர்ந்தனர். பின்னர், மூடப்பட்ட வெற்றிடக் குழாயின் உள்ளே உள்ள காற்று அகற்றப்பட்டதால் அது ஒரு விமானம் போல் மாறியது. அதில் அவர்கள் மணிக்கு 172 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மதுரை பயணம்
காந்தச் சக்தியில் செயல்படும் புதிய போக்குவரத்து அமைப்பில் பயணித்தால், பயணம் முழுவதும் கிட்டத்தட்ட சத்தமே இருக்காது. நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனுக்கு 30 நிமிடங்களில் சென்றுவிடமுடியும் நம்ம ஊர் கணக்கில் சொல்வதாக இருந்தால் சென்னையில் இருந்து மதுரைக்கு இப்போதைய டெஸ்ட் டிரைவ் (170 கிமீ) வேகத்தில் சென்றால் கூட ஓரு மணி நேரத்தில் செல்ல முடியும். முழு வேகத்தில் சென்றால் அரை மணி நேரம் தான் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு 1 மணிநேரத்திற்கு மேல் ஆகும்.
Virgin Hyperloop போக்குவரத்து முறை 2030ஆம் ஆண்டுக்குள் நடப்பு சத்தியாமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைபர்லூப் போக்குவரத்து முறை
உறை (pod) போன்று வடிவமைக்கப்படும் ஒரு பெட்டியில் பயணிகள் மற்றும் பொருள்களை வைத்து மின் மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வெற்றிடக் குழாய்களில் உந்தித் தள்ளும் முறை தான் ஹைபர்லூப் எனப்படும் புதிய போக்குவரத்து முறை.
காற்றுதடை இருக்காது
தற்போதுள்ள வழக்கமான போக்குவரத்து பயணத்தின்போது உராய்வு மற்றும் காற்றுத் தடையால் வேகம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் ஹைபர்லூப் போக்குவரத்தில் அப்படியான வாய்ப்பே இருக்காது. ஏனெனில் இதற்கு என்றே தரைக்குமேல் காலிக்குழாய்களைக் கொண்டு தொடர்ச்சியாக அமைக்கப்படும் பாதையில் எந்தத் தடையுமின்றி மணிக்கு 450-1000 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும். சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் சென்றுவிட முடியும்.
2013ல் மீண்டும் தொடங்கியது
19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு கிடப்பில் கிடந்த இந்த ஹைபர்லூப் தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான Tesla and Spacex-இன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்க் (Elon Musk) என்பவரால் கடந்த 2013-இல் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதனை தற்போது விர்ஜின் ஹைபர்லூப் என்ற நிறுவனம் தீவிரமாக செய்து வருகிறது. இப்போது மனிதர்களை வெற்றிகரமாக பயணிக்க வைத்து சாதித்துள்ளது. இன அடுத்தகட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.