விஷ மாத்திரையையே முறித்த எலான் மஸ்க்! பிளான் பியை களமிறக்கி ட்விட்டரை வாங்கியது எப்படி? பரபர பின்னணி
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து எலான் மஸ்க்கை தடுக்கும் வகையில் அதன் போர்ட் உறுப்பினர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதே போர்ட் உறுப்பினர்கள் தற்போது இறங்கி வந்து எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் நிறுவனத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை எலான் மஸ்க் சாதித்து எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது பற்றி பார்க்கும் முன் ஒரு குட்டி ஸ்டோரி.. பொதுவாக தீவிரவாதிகள், ஆயுத போராளிகள் தங்கள் கழுத்தில் சயனைடு குப்பி வைத்து இருப்பார்கள். அதாவது விஷ மாத்திரை.
எதிரி நாட்டு படைகளிடம் சிக்கும் போது தங்களிடம் இருக்கும் தகவல்கள் வெளியே கசிய கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் விதமாக இப்படி போராளிகள் விஷ மாத்திரை சாப்பிடுவது வழக்கம்.
44 பில்லியன் டாலர்.. நினைத்ததை முடித்தார் எலான் மஸ்க்.. ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார்!
விஷ மாத்திரை
ஆனால் அதே போராளியிடம் உனக்கு ஒரு நல்ல டீலிங் தருகிறேன்.. அதுவும் இப்போதே அந்த டீலிங்கில் கையெழுத்து போடலாம்.. அந்த விஷ மாதிரியை மட்டும் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு என்னிடம் பேசு என்று எதிரி நாட்டு ராணுவம் சொன்னால் எப்படி இருக்கும். அதற்கு அந்த போராளியும் விஷ மாத்திரையை தூக்கி வீசிவிட்டு எதிரி நாட்டு ராணுவத்துடன் ஆலோசனை மேற்கொண்டு ஒப்பந்தம் செய்தால் எப்படி இருக்கும்.. அதுதான் தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் நடந்து உள்ளது.. குழப்புகிறதா? சரி ட்விட்டரை மஸ்க் எப்படி வாங்கினார் என்று பார்க்கலாம்.
ட்விட்டர்
முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாகத்தான் மஸ்க் உயர்த்தினார். முதலில் 5 சதவிகித பங்குகளை வைத்து இருந்தவர் அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பங்குகளை 9.2 என்ற அளவிற்கு உயர்த்தினார். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அதிக பங்கு கொண்டு இருக்கும் தனி நபராக மஸ்க் உருவெடுத்தார். முன்னதாக இந்த நிறுவனத்தில் வான்கார்ட் குழு வைத்திருந்த 8.8 சதவிகித பங்குதான் அதிகபட்ச பங்காக இருந்தது.
வான்கார்ட் குழு
அதை மஸ்க் பின்னுக்கு தள்ளினார். முறைப்படி அதிக பங்கு வைத்திருந்த அவர் தனக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் விருப்பம் இல்லை என்று முதலில் பங்குதாரர்கள் பைலிங்கில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன்பின் போர்ட் உறுப்பினர்களின் குழுவில் இணைய மறுத்தார். இதற்கான அழைப்பை சிஇஓ பராக் அக்ரவால் விடுத்து இருந்தார். ஆனாலும் கூட போர்ட் உறுப்பினர்களின் குழுவில் அவர் இணையவில்லை.
போர்ட் உறுப்பினர்
போர்ட் உறுப்பினர் குழுவில் இருந்தால் மஸ்க் 14.5 சதவிகித பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது. அதேபோல் இவர் குழுவில் சொல்லும் மாற்றங்களை மற்ற எல்லா உறுப்பினர்களும் ஏற்க வேண்டும். எனவே மஸ்க் சுதந்திரமாக ட்விட்டர் நிறுவனத்தில் மாற்றங்களை செய்ய முடியாது. இதனால் போர்டில் இணையாத எலான் மஸ்க் மொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எடுத்தார். முதலில் இதை வாங்கும் விருப்பம் இல்லை என்றவர் அதை வாங்கும் முடிவை எடுத்தார்.
Recommended Video
மொத்தமாக ட்விட்டரை வாங்க முடிவு
அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை இந்திய மதிப்பில் ரூபாய் 4120 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளார். மொத்தமாக 100 சதவிகித ஷேரையும் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 37 பில்லியன். இதை மொத்தமாக 44 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்தார். இதை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் தன்னிடம் பிளான் பி இருக்கிறது என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார்.
பிளான் பி
இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த காஸ்டலியான யுத்தம் தொடங்கியது. மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன.ஏனென்றால் ட்விட்டரில் பெரும்பான்மை பங்குகளை மஸ்க்தான் வைத்து இருந்தார். இதனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் போன்ற பங்குதாரர்களின் கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும். ஒருவேளை மஸ்க் கொடுத்த ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் அது பங்கு ரீதியாக அந்த நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம்.
காஸ்டலியான யுத்தம்
அதோடு பங்குதாரர்கள் விருப்பத்திற்கு எதிராக போர்ட் செயல்படுவதாக கூறி போர்ட் கலைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மஸ்க்கை விட அதிக பங்குகளை வாங்க ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். மஸ்க்கை முந்தும் வகையில் தற்போது வான்கார்ட் குழு மீண்டும் பங்குகளை உயர்த்தியது. வான்கார்ட் நிறுவனம் தனது மொத்த பங்குகளை 10 சதவிகிதமாக உயர்த்தியது. அதோடு ட்விட்டர் நிறுவனம் பாய்சன் பில் எனப்படும் விஷ மாத்திரையை சாப்பிட்டது.
பாய்சன் பில்
அதாவது மேலே படித்தோமே எதிரி நாட்டிடம் சிக்காமல் இருக்க வீரர்கள் விஷ மாத்திரையை சாப்பிடுவது போல ட்விட்டர் நிறுவனம் மஸ்க்கிடம் சிக்காமல் இருக்க விஷ மாத்திரையை சாப்பிட்டது. அதாவது ட்விட்டர் நிறுவனம் புதிதாக சில பங்குகளை உருவாக்கி அதை விற்பனை செய்தது. இந்த பங்குகளை அதன் மற்ற பங்குதாரர்கள் குறைந்த விலைக்கு வாங்க முடியும். ஆனால் மஸ்க் வாங்க முடியாது.
விஷ மாதிரி என்றால் என்ன?
மற்ற பங்குதாரர்கள் இந்த பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கினால்.. அதை வாங்கிய பின் அதன் உண்மையான மதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் புதிய பங்குகளை பல பங்குதாரர்கள் ஆர்வமாக வாங்குவார்கள்.. இப்படி புதிய பங்குகள் வேறு பங்குதாரர்களுக்கு விற்கப்படும் நிலையில், தானாக மஸ்க் வைத்து இருக்கும் பங்கு மதிப்புகள் சரிவை சந்திக்கும். இதை கார்ப்ரேட் உலகில் பாய்சன் பில் என்பார்கள். அதாவது ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயலும் நபரை தடுக்கும் வகையில் மற்ற பங்குதாரர்களுக்கு கூடுதல் பங்குகளை விற்கும் யுக்தி.
போராளி கதை
இதை ட்விட்டர் நிறுவனம் கையில் எடுத்தது. ஆனால் மேலே படித்த போராளி கதையை போலவே.. ட்விட்டர் நிறுவன போர்ட் உறுப்பினர்கள் பின்னர் தானாக முன் வந்து மஸ்க் ஆபரை ஏற்றுக்கொண்டனர். அந்த போராளி எப்படி எதிரி நாட்டிடம் ஒப்பந்தம் செய்தாரோ அப்படி. இதற்கு மஸ்க் இறக்கிய பிளான் பிதான் காரணம். முதல் விஷயம், தனக்கு நெருக்கமாக இருக்கும் மற்ற பங்குதாரர்களை அழைக்க இவர் முயன்றார். ட்விட்டர் நிறுவனம் பாய்சன் பில்லை செயல்படுத்தினால் நீங்களும் பங்குகளை வாங்கி குவியுங்கள்.. ட்விட்டரை வாங்க உதவுங்கள்.. என்று அவர்களிடம் உதவி கேட்டார்.
லோன் எடுத்தார்
இது போக.. மொத்தமாக ரொக்கமாக இப்போதே 44 பில்லியன் டாலரை தருகிறேன் என்றும் மஸ்க் குறிப்பிட்டார். இதற்காக அவர் வங்கிகளில் கடன் வாங்க முடிவு செய்தார். அதன்படி 21 மில்லியன் டாலரை தனது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இது போக மீதம் உள்ள தொகையை டெஸ்லா பங்கு, ட்விட்டர் பங்கு ஆகியவற்றின் மீது லோனாக எடுத்தார். இதற்காக மார்கன் ஸ்டான்லி வங்கியை அவர் அணுகினார்.
ரொக்கமாக பணம்
விளைவு அவரின் கைக்கு மொத்தமாக 44 பில்லியன் ரொக்கம் வந்தது. இதை போர்ட் உறுப்பினர்கள் ஏற்றே ஆக வேண்டும். ஏனென்றால் மார்க்கெட் விலையை விட பங்கிற்கு அவர் கூடுதல் விலை தர ரெடி. அதை ரொக்கமாக உடனே கொடுக்க ரெடி. இதனால் மீண்டும் போர்ட் உறுப்பினர்கள் கூடி ஆலோசனை செய்தனர். பங்குதாரர்களின் விருப்பமும் இந்த ஆபரை எடுக்க வேண்டும் என்பதே. இதனால் மஸ்க் ஆபரை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
கடைசியில் சாதித்தார்
இதை ஏற்கவில்லை என்றால் பங்குதாரர்களின் விருப்பத்தை மீறியதாகவும்.. போர்ட் கடமையை தவறியதாகவும் புகார் எழும். இது போர்டுக்கு எதிராக பங்கு சந்தை மற்றும் வர்த்தக உலகில் புகார் வைக்க காரணமாக அமையும். இதை தடுக்கும் பொருட்டு.. விஷ மாதிரியை ஓரமாக வைத்துவிட்டு போர்ட் உறுப்பினர்கள் மஸ்க் கொடுத்த ஆபரை ஏற்றுக்கொண்டனர். நேற்று 10 மணி நேரத்திற்கும் மேல் நடந்த ஆலோசனைகளுக்கு பின் கடைசியில் ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.