மீண்டும் மீண்டுமா? 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட "ஆர்டெமிஸ்".. வெலவெலத்த நாசா.. ஆனால் காரணம் வேறு!
நியூயார்க்: நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நாசா முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான சோதனை ஓட்டமாக 'ஆர்டெமிஸ் -1' ராக்கெட்டை விண்ணில் ஏவ இருந்தது நாசா.
மனிதர்களை தவிர்த்து இதர பல உயிரினங்கள் விண்வெளியில் பயணிக்க வைத்து அவற்றை மீண்டும் பூமிக்கு கொண்டுவருவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்கு சக்தி வாய்ந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டது.
இந்த ராக்கெட் கடந்த ஆகஸ்டில் விண்ணில் ஏவும் என சொல்லப்பட்ட நிலையில் அது தற்போது மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நவம்பரில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
நாசா களமிறக்கும் ’டார்ட்’ விண்கலம்! இதற்காகவா? அதிகாலையில் உங்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
சோதனை
விண்வெளியை காலனித்துவப்படுத்துவதற்கான போட்டி துவங்கிவிட்ட நிலையில் அமெரிக்காவின் நாசா இதில் ஒருபடி முன்னே இருக்கிறது. அதன்படி நிலவில் ஒரு செயற்கை ஆய்வு கூடத்தை அமைப்பது என்றும் அங்கிருந்து இதர கோள்களுக்கு பயணிப்பது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாக செயல்படுத்த 'ஆர்டெமிஸ்' எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் முதல்கட்டமாக விண்வெளிக்கு பல்வேறு உயிரினங்களை அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒத்திவைப்பு
இதற்கு சக்தி வாய்ந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரினங்களை ஏற்றி அனுப்பி அந்த உயிரினங்களை நீண்ட நாட்கள் விண்வெளியில் பணிக்க வைத்து பின்னர் பூமிக்கு மீண்டும் கொண்டுவரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு வரும் உயிரினங்களை ஆய்வு செய்து அதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை வைத்து அடுத்த கட்டத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு சென்று திரும்புவார்கள். இந்த திட்டத்தின்படி முதல் கட்ட ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட இருந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பப்படும்போது ஏற்பட்ட கசிவு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும்
இதேபோல கடந்த இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று(செப்.27) ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் அமெரிக்காவில் வீசி வரும் புயல் காரணமாக இந்த முறையும் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராக்கெட்டை புயலிலிருந்து பாதுகாக்க அதனை விமானங்கள் நிறுத்தி வைத்திருக்கும் பெரிய கட்டடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 27 மெட்ரிக் டன் கொண்ட இந்த ராட்சத ராக்கெட்டை மீண்டும் பணிமனைக்கு கொண்டு வந்து அதனை திரும்ப ஏவுதளத்திற்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான பணி என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விண்வெளியை காலனிப்படுத்துதல்
இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த பணி மீண்டும் நவம்பரில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்த ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்படும் என நாசா அறிவித்திருக்கிறது. நாசாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவிட்டால் அடுத்து நாம் செவ்வாய் போன்ற கோள்களை எளிதில் காலனிபடுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.