இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து.. ஊழியர்களின் பாதுகாப்பு பற்றி அச்சம்.. டிவிட்டர் நிறுவனம் கவலை!
நியூயார்க்: இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் பணியாற்றும் டிவிட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கும் டிவிட்டருக்கும் இடையில் தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு முக்கிய காரணங்களால் இந்த மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.
முதல் விஷயம் டூல்கிட் சர்ச்சை. காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் என்று கூறி பாஜக தலைவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் நிறைய ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு இருந்தனர். இப்படி டூல்கிட் புகைப்படங்களை வெளியிட்ட பாஜக தலைவர்களின் டிவிட்கள் மீதும் டிவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

முத்திரை
டூல்கிட் தொடர்பான சர்ச்சையில் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா உட்பட பாஜக தலைவர்களின் டிவிட்களில் "Manipulated" டேக் என்ற முத்திரையை டிவிட்டர் நிறுவனம் குத்தியது. அதாவது இவர்கள் செய்த டூல் கிட் டிவிட்கள் தவறான தகவல்களை, செய்திகளை, வழிகாட்டுதல்களை கொண்டு இருப்பதாக டிவிட்டர் கூறியுள்ளது. மத்திய அரசு இதை நீக்க சொல்லியும் டிவிட்டர் நிறுவனம் இதை நீக்கவில்லை.

மேலும் நடவடிக்கை
ஆனால் கூடுதலாக மேலும் பல பாஜக தலைவர்களின் டிவிட்களில் இதே முத்திரையை டிவிட்டர் குத்தியது. இதையடுத்து குர்கான் டிவிட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீஸ் மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் டூல் கிட் விவகாரம் தொடர்பாக டிவிட்டர் அலுவலகத்தில் விசாரணை நடத்தியது.

ஆதாரம்
டூல் கிட் விவகாரத்தை டெல்லி போலீஸ் விசாரித்து வரும் நிலையில், எப்படி முன்முடிவுகளோடு டிவிட்டர் பாஜக தலைவர்களின் டிவிட்டில் "Manipulated" டேக் போட்டது என்று போலீஸ் விசாரித்தது. டிவிட்டர் நிறுவனத்திடம் டூல் கிட் விவகாரம் தொடர்பாக ஆதாரம் எதுவும் உள்ளதா, அப்படி இல்லை என்றால் "Manipulated" டேக் போடப்பட்டது ஏன் என்று டிவிட்டர் நிறுவனத்திற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மனும் அனுப்பப்பட்டது.

ஐடி விதி
இது போக இன்னொரு பக்கம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. டிவிட்டர் இந்த விதிகளை பின்பற்றுவதாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்த விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் முடிந்து 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டிவிட்டர் இன்னும் இதை ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசு - டிவிட்டர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கருத்து
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனம் இது குறித்து தற்போது வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. டிவிட்டரில் சர்வதேச பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பணியாற்றும் டிவிட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைகிறோம். சமீபமாக நடக்கும் நிகழ்வுகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கவலை
அதேபோல் டிவிட்டர் பயன்படுத்தும் மக்களுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் தடுக்க படுகிறதோ என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் தடுக்கப்படுவதாக அச்சம் கொள்கிறோம் என்று டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இதில் டெல்லி போலீஸ் குறித்து நேரடியாக குறிப்பிடாமல் டிவிட்டர் நிறுவனம் விமர்சனம் ஒன்றை வைத்துள்ளது.

மிரட்டல்
அதன்படி போலீசை வைத்து டிவிட்டருக்கு எதிராக மிரட்டல் தந்திரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. நாங்கள் சர்வதேச விதியின்படி இயங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எதிராக மிரட்டல்கள் போலீசாரின் மூலம் நிகழ்த்தப்படுகின்றன என்று டிவிட்டர் நிறுவனம் புகார் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications