அமெரிக்காவை சீரழித்த கொரோனா.. 24 மணி நேரத்தில் 2000 பேரை பலி கொடுத்த முதல் நாடாக மாறிய கொடுமை
நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் 2,108 இறப்புகளுடன் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவு செய்த முதல் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கெடுப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
Recommended Video
இன்னொரு கொடுமை என்னவென்றால் உலகிலேயே அதிக இறப்புகளை சந்தித்த இத்தாலியின் மோசமான சாதனையை அமெரிக்கா முறியடிக்கும் தூரத்தில் வந்துவிட்டது. இத்தாலியில் இதுவரை 18 ஆயிரத்து 849 பேர் இந்த வைரசால்உயிரிழந்தனர். அமெரிக்காவில் இதுவரை 18 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்தனர்.
மேலும், அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. அதாவது 24 மணி நேரத்துக்குள் புதிதாக அங்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இணைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்
அதிலும் நியூயார்க் நகரம் மற்றும் நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோரின் உடல்களை புதைப்பதற்கு இடம் இல்லாத காரணத்தால், சடலங்கள் சவப்பெட்டியில் வைத்து ஒட்டுமொத்தமாக கூட்டம் கூட்டமாக புதைக்கப்பட்டு வரும் காட்சிகள் நெஞ்சை கலங்க அடிப்பதாக உள்ளது.
உலக வல்லரசு நாடு என்று நம்பப்பட்டு வரும் அமெரிக்கா, கரோனா நோய் தாக்குதலில் பெரும் பின்னடைவை சந்தித்து, சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. மருத்துவத்துறையில் சாதித்த நாடுகள்தான் வல்லரசு என்று இனிமேல் அழைக்கப்பட வேண்டும் என்று மக்கள் மனதில் கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளன.
அதிகமான ஆயுதங்களும், ராணுவ பலமும் நாட்டு மக்களை காக்க உதவுவதைவிட, மருத்துவ பலம்தான் அதிக மக்களை காப்பாற்ற உதவும் என்பதற்கு அமெரிக்கா ஒரு உதாரணமாக மாறிவிட்டது.