சடலங்கள் மீட்கப்பட்ட ஏரி.. ‘பிணநீர்’ விற்பனையை ஆரம்பித்து சர்ச்சையில் சிக்கிய பெண்!
பிணநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து இணையத்தில் பிரபலமாகி இருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர்.
நியூயார்க்: சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட மீட் ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட பிணநீர் என அசுத்தமான நீர் அடைக்கப்பட்ட பாட்டில்களை விற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லாஸ் வேகாஸின் மீட் (Mead) ஏரியில் இருந்து, தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் வறண்டு வரும் இந்த ஏரியில் இம்மாதத்தின் தொடக்கத்தில்தான் முதல் சடலம் மீட்கப்பட்டது. பீப்பாயில் அடைக்கப்பட்டிருந்த அந்த சடலம், 1970-80களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடையது என விசாரணையில் தெரிய வந்தது.
2 பிஞ்சு குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள்.. மொத்தம் 5 பேர் தற்கொலை! அதிர்ந்த ராஜஸ்தான்
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் மேலும் பல சடலங்கள் அந்த ஏரியில் இருந்து மீட்கப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்ற யூகம் உள்ளது.
புதிய தொழில்
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அமெரிக்கப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மேலும் நீர் குறையும் போது, இன்னமும் சடலங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, இணையத்தில் பேசு பொருளாகியுள்ள இந்த ஏரியை வைத்து புதிய தொழில் ஒன்றைத் துவங்கி பிரபலமாகி இருக்கிறார் சார்லி என்ற 42 வயதுப் பெண் ஒருவர்.
லேக் மீட் கார்ப்ஸ் வாட்டர்
ஏற்கனவே, லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் மாலில் பிளாஸ்பீம் பொட்டிக் என்ற சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார் சார்லி. தனது கடையில் மந்திரம், மாந்திரீகம் மற்றும் பிற இருண்ட தலைப்புகள் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வரும் இவர், புதிதாக "லேக் மீட் கார்ப்ஸ் வாட்டர்" (Lake Mead Corpse Water) என்பதை அறிமுகம் செய்துள்ளார்.
அழுக்கான பிணநீர்
சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த அழுக்கான நீர், பிணநீர் எனக் கூறி சார்லி விற்பனை செய்து வருகிறார். சார்லியுடன் அவரது கணவரும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். பாட்டில் பார்ப்பதற்கே அருவருப்பாக அழுக்கான நீருடன் உள்ளது. அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள பேப்பரில் இரண்டு எலும்புக்கூடுகளுக்கு நடுவே மீட் ஏரியை குறிக்கும் வகையில் பீப்பாய் ஒன்றும் உள்ளது.
மாந்திரீகத் தேவை
சார்லி தான் விற்பனை செய்யும் இந்த பிணநீர், மாந்திரீக நடைமுறைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார். சிறிய பாட்டில் பிணநீருக்கு 7.77 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயித்துள்ளனர். இந்திய மதிப்பில் இது ரூ. 603 ஆகும். இதுவரை ஆன்லைனில் 75 பாட்டில்களும், நேரடியாக கடையில் 50 பாட்டில்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக சார்லி தெரிவித்துள்ளார்.
சர்ச்சை
சார்லியின் இந்த பிணநீர் பற்றிய செய்தி வைரலானதைத் தொடர்ந்து, ஏற்கனவே ஏரியின் நீர் குறைந்து வரும் நிலையில், அங்கிருந்து இப்படித் தண்ணீரை திருடி சார்லி விற்பனை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது எழுந்தது. இதனால் தனது பிணநீர் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார் சார்லி.
உண்மையல்ல பொய்
அதில், 'தான் விற்பது மீட் ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட நிஜமான பிண நீர் அல்ல.. என்றும், தாவரம், கண்ணாடி பாறைகள், அழுக்கு மற்றும் பச்சை மைக்கா ஆகியவற்றைக் கொண்டு தாங்கள் உருவாக்கிய செயற்கையான அசுத்தமான நீர் 'என்றும் சார்லி தெரிவித்துள்ளார். எது எப்படியோ சரியான சந்தர்ப்பை சரியாகப் பயன்படுத்தி தற்போது இணையத்தில் பிரபலமாகி விட்டார் சார்லி.