நீலகிரி, கொடைக்கானலின் கோடை விழாக்கள் இனிதே நிறைவு.. மலர்க்கண்காட்சிகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
: நீலகிரியில் நடைபெற்று வந்த கோடை விழா நேற்றுடன் முடிவடைந்தது
ஊட்டி: நீலகிரியில் கோலாகலமாக நடந்து வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.. அதேபோல, கொடைக்கானலில் கடந்த 24ம் தேதி கோடைவிழாவும் நேற்றுடன் முடிவடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களாகவே, கொரோனா தொற்று காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை..
இதனால் பொருளாதார ரீதியாக உள்ளூர் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.. அதேபோல, சுற்றுலாப் பயணிகளும் சீசன்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

காய்கறி கண்காட்சி
இந்நிலையில், தொற்று குறைந்ததையடுத்து, கோடை விழாக்களாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர்கண்காட்சி ஆகியவை நீலகிரியில் நடந்தன. கடந்த 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது... முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி கடந்த 21ம் தேதி துவங்கியது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

ஷீலா கேத்தரின்
21ம் தேதி துவங்கிய மலர் கண்காட்சி 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. மலர் கண்காட்சியில் 275 மலர் வகைகளை சேர்ந்த 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் இடம் பெற்றன. தொடர்ந்து கண்காட்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன... அதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி கடந்த 28-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியை குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தொடங்கி வைத்தார்.. இங்கு 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு இருந்தது...

மஞ்சப்பை
பல்வேறு வகையான பழங்களை கொண்டு தேன் வண்டு, பாண்டா கரடி போன்ற வடிவமும், தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை, ஊட்டி 200 போன்ற வடிவம் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில், பல்வேறு பழ வகைகளை கொண்டு மா வடிவம், டிராகன், அணில், புலி, பூண்டி அணை, மீன், தாஜ்மகால், அன்னப்பறவை, மயில், ஐல்லிக்கட்டு, தேர் போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கோடை விழா
பழங்களால் ஆன பல்வேறு உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் பழக்கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி மலர் கண்காட்சியை மேலும் ஒரு வார காலத்திற்கு தோட்டக்கலை துறையினர் நீட்டிப்பு செய்திருந்தனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்தது..

கொடைக்கானல்
அதேபோல, கொடைக்கானலில் கடந்த 24ம் தேதி துவங்கிய கோடைவிழாவும், 59வது மலர்க் கண்காட்சியும் நேற்றுடன் முடிவடைந்தன.. கடந்த 6 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ரசித்து சென்றனர். சுற்றுலாப் பயணிகள் மூலம் ரூ.18 லட்சம் தோட்டக்கலைத் துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications