சைரன் வச்ச கார்.. பழனி கோயிலில் நல்லதா ஓசி ரூம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி.. விரட்டி பிடித்த ஊழியர்கள்
பழனி: ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பழனி முருகன் கோயில் தங்கும்விடுதியில் இலவசமாக அறை கேட்ட நபரை தேவஸ்தான ஊழியர் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
Recommended Video
மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்து, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
மேலும் தனக்கு இலவசமாக நல்ல அறை வழங்குமாறும் கேட்டுள்ளார். இந்நிலையில் வழக்கமாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் வந்தால் உள்ளூர் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது வழக்கம்.
அடையாள அட்டை
எனவே தங்கும் விடுதியில் இருந்த மேலாளர் அடையாள அட்டையை கேட்டும், பழனியில் உள்ள வருவாய்த் துறை அதிகாரி ஒருவரின் பரிந்துரையும் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது முன்னுக்குப் பின் முரணாக குமார் பதில் அளித்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள் பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தப்பியோட்டம்
இதை அறிந்த குமார் காரை விட்டு விட்டு தப்பி ஓடியபோது, அவரை துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள், குமாரை பிடித்து வந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறையில் வசித்து வரும் குமார் தனது காரில் சைரன் பொருத்திக் கொண்டு, தமிழக அரசு என்று பதாகையை மாட்டிக் கொண்டு வலம் வந்ததும் தெரியவந்தது.
சலுகைகள்
பல இடங்களில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது. கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற குமார் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி சிறப்பு தரிசனம் செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது. குமார் மீது வழக்கு பதிவு செய்த பழனி அடிவாரம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உதவி கமிஷனர்
இதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம் சைரன் பொருத்திய காரில் போலீஸ் உதவி கமிஷனர் என கூறி கொண்டு வலம் வந்த நபரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இவர் சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது. இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் உள்ள சுங்கச்சாவடியில் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.