பாய்ந்து வந்த லாரி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. பீகாரில் 12 பக்தர்கள் பரிதாப பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதுபோல நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம்..கடைக்கோடி மக்களையும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்
விபத்து
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தின் தேஸ்ரி பகுதியில் இந்த விபத்து நடந்திருக்கிறது. தேஸ்ரியின் சுல்தான்பூர் கிராமத்தில் 'பூமியா பாபா' எனும் கோயில் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் இன்னும் சில நாட்களில் திருமணம் ஒன்று நடக்க இருந்த நிலையில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டை சேர்ந்த உறவினர்கள் கோயிலில் நேற்றிரவு பிரார்த்தனை செய்துள்ளனர். பிரார்த்தனையின் ஒரு பகுதியாக சாலையின் ஓரத்தில் உள்ள அரச மரத்தை வழிபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தினர் மத்தியில் புகுந்துள்ளது. இது எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
உயிரிழப்பு
இதனை எதிர்பாராத அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இதுவரை 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும் இதில் உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பிரதமர் மோடி
விபத்து நடந்தவுடன் மஹுவா தொகுதியின் 'ராஷ்டிரிய ஜனதா தளம்' கட்சி சட்டமன்ற உறுப்பினர் 'முகேஷ் ரூஷன்' சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக பாட்னா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அறிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். பிரார்த்தனை செய்வதற்காக கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.