பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம்.. பதவி வழங்காததால் 5 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு.. நிதிசுக்கு புது சோதனை!
பாட்னா: பீகாரில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டநிலையில், அமைச்சர் பதவி வழங்கப்படாததால் 5 எம் எல் ஏக்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்து இருப்பது ஆளும் நிதிஷ் குமார் கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.
இதில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். எனினும் ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாஜகவுடன் நிதிஷ் குமாருக்கு மனக்கசப்பு இருந்து வந்தது.

நிதிஷ் குமாரின் அரசியல்
இதன் காரணமாக எப்போதும் பாஜனதா எடுக்கும் அதிரடி திருப்பம் வாய்ந்த அரசியல் வியூகத்தை இந்த முறை நிதிஷ் குமார் கையில் எடுத்தார். அதன்படி அவர் பாஜனதா கூட்டணியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்ததோடு, ஆளுநரிடமும் ராஜினாமா கடிதத்தை அளித்தார். தொடர்ந்து வேகமாக காய் நகர்த்திய நிதிஷ் குமார் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டார். தொடர்ந்து இந்த கூட்டணியின் தலைவரான நிதிஷ் குமார் 8-வது முறையாக மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றார். மாநிலத்தின் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

அமைச்சரவை விரிவாக்கம்
இந்த நிலையில், பீகாரில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ள இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவை விரிவாக்கத்தில் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியின் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவுக்கும் அமைச்சராகியுள்ளார்.

31 பேருக்கு பதவிப்பிரமாணம்
முதல்வர் நிதிஷ்குமார் உள்துறையை தன்வசமமே வைத்துக்கொண்டார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சுகாதாரத்துறை பொறுப்பை எடுத்துக்கொண்டார். தேஜஸ்வியின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட 31 பேருக்கும் அம்மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழா புறக்கணிப்பு
இந்த நிலையில், அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஐந்து பேர், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த விவகாரம் பீகார் அரசியல் வட்டாரத்தில் புதிய அனலை கிளப்பியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களான சஞ்சீவ் குமார், பங்கஜ் குமார் மிஸ்ரா, சுதர்சனன் குமார், ராஜ்குமார் சிங், ஷாலினி மிஸ்ரா இந்த 5 பேரும்தான் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவை புறக்கணித்தவர்களாவர்.

புதிய தலைவலி
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஐந்து பேருமே பூமிகார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பீகார் சட்டசபையில் புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிருப்தி குரல் எழுந்துள்ளது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இது சற்று தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications