பீகார் கலவரம்.. தனி சிறையில் 8 வயது சிறுவன்! ரிஜ்வானுக்கு நடந்தது என்ன? கொந்தளித்த நெட்டிசன்கள்
பாட்னா: பீகார் மாநிலம் பர்ஹாரியாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 8 வயது சிறுவனை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நெட்டிசன்கள் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் அமைந்து உள்ளது பர்ஹாரியா. இங்கு காவி உடையணிந்து ஊர்வலம் சென்ற இந்துத்துவா அமைப்பினர் மசூதி அருகே கட்டைகளை கொண்டு ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டபடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக அங்குள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி!
மசூதியில் போலீஸ்
இந்த 12 பேரில் 70 வயதான முஹம்மது யாசினும் அவரது 8 வயது பேரன் ரிஜ்வானும் குரேஷியும் அடங்குவார்கள். மாலை நேர தொழுகைக்காக சென்ற முதியவரையும் அவரது பேரனையும் கலவர வழக்கில் பீகார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அறுவை சிகிச்சை
இதுகுறித்து ரிஸ்வானின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இருவரும் தொழுகைக்காகவே சென்றதாகவும், கலவரம் செய்யும் நோக்கம் கொண்டவர்கள் இல்லை எனவும், கைது செய்யப்பட்ட முதியவர் யாசினுக்கு அண்மையில்தான் 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு ஏராளமான உடல்நல குறைபாடுகள் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
விடுவிக்க கோரிக்கை
முஹம்மது யாசினையும் அவரது பேரன் ரிஜ்வானையும் பீகார் போலீசார் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள். இதுகுறித்து ரிஜ்வானின் சகோதரர் அசார் மக்தூப் கூறுகையில், "எனது இளைய சகோதரன் ரிஜ்வான் தனி கைதிகள் வார்டில் அடைக்கப்பட்டு உள்ளான்.
விலங்குடன் சிறையில் சிறுவன்
அவனை சந்திக்க எனது குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் எங்களுக்கு ரிஜ்வானை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவனது கையில் இருந்த விலங்கை கண்டு என்னுடைய தாயார் அச்சமடைந்தார். தன்னுடைய சொந்த தாயை அடையாளம் காண முடியாத நிலையில் ரிஜ்வான் இருந்தான். வீட்டு செல்ல வேண்டும் என்று அவன் அழுதான்." என்றார்.
டிரெண்டாகும் ஹேஷ்டேக்
12 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, பிறப்புச் சான்றிதழை ரிஜ்வானின் பெற்றோர் நீதிமன்றத்தில் சமர்பித்ததாகவும், இருப்பினும் அவனை விடுவிக்க போலீசார் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து #ReleaseRizwan என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.