ஜேடியூவுடன் கூட்டணி மட்டுமே.. ஓட்டு பாஸ்வான் கட்சிக்கு- நிதிஷ்குமார் காலை வார பாஜக பக்கா ப்ளான்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி என்கிற பெயரில் பாஜக ஆடுபுலி ஆட்டத்தை ஆட தயாராகிவிட்டது. நிதிஷ்குமாருக்கு எதிரான பாஜகவின் இந்த சித்துவிளையாட்டை எதிர்கொள்ள ஜேடியூவும் தயாராக இருக்கிறதாம்.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு அக்.28 முதல் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் தேர்தல்: நிதிஷ்குமாருக்கு கூட இருந்தே ஆப்பு வைக்கும் பாஜக.. பூமராங் போல திருப்பி தாக்கும்?
தொகுதி பங்கீடு அறிவிப்பு
ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை அறிவித்திருக்கிறது. ஜேடியூ 122 இடங்களிலும் பாஜக 121 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
ஜேடியூ நிபந்தனை
ஜேடியூ-பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபி கட்சி, ஜேடியூவை எதிர்த்து போட்டியிடுவோம் என அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் பாஜக தலைமையில் பீகார் ஆட்சி அமைக்க உதவுவோம் என கூறியுள்ளது. இதனை ஜேடியூ ரசிக்கவும் இல்லை. இதனால் பாஸ்வான் கட்சியுடனான உறவை துண்டிக்க ஜேடியூ வலியுறுத்துகிறது.
ஜேடியூவை வீழ்த்த பாஸ்வான் கட்சி
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, பிரதமர் மோடியின் படங்களை பாஸ்வான் கட்சி பயன்படுத்தக் கூடாது என்கிற அளவில் மட்டும் நிபந்தனை விதித்திருக்கிறது. அந்த கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஜேடியூ நிபந்தனை குறித்து மவுனம் சாதிக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் ஜேடியூ வெல்லும் தொகுதிகளில் வேட்டு வைப்பதற்கு பாஸ்வான் கட்சியை பயன்படுத்துவது என்கிற முடிவில் இருக்கிறதாம்.
பாஸ்வான் கட்சிக்கு பாஜக ஓட்டு
அதாவது ஜேடியூ அதிக இடங்களில் வென்றால் நிதிஷ்குமார் தலைமையில்தான் ஆட்சி அமையும். அதனால் ஜேடியூ கூட்டணியிலேயே இருந்தாலும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுவதை தடுக்க விரும்புகிறது. இதனால் ஜேடியூவை எதிர்த்து போட்டியிடும் தொகுதிகளில் பாஸ்வான் கட்சிக்கே ஓட்டுப் போடுவது என்கிற முடிவில் இருக்கிறதாம் பாஜக. இதனை ஜேடியூம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது.
சிவசேனா போல... மிரட்டும் ஜேடியூ
இது தொடர்பாக ஜேடியூ மூத்த தலைவர் கேசி தியாகி கூறுகையில், மகாராஷ்டிராவில் சிவசேனாவும் காங்கிரஸுமே இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறது என்கிற போது எதுவும் எப்போதும் நடக்கலாம். ஆனால் தற்போதைய நிலையில் பீகார் அந்த ஒரு நிலைவராது என கருதுகிறோம் என கூறியிருக்கிறார். ஒருவேளை பாஜக தங்களை வீழ்த்த வியூகம் வகுத்து செயல்பட்டால் பாஜகவையே கழற்றிவிட்டு ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் சிவசேனா பாணியில் ஆட்சி அமைப்போம் என ஜேடியூ மறைமுகமாக மிரட்டல் விடுத்திருக்கிறது.